வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச துறையில் நியமனம் வழங்க கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று திருகோணமலையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதனை திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது. திருகோணமலை உட்துறை முக வீதியில் உள்ள கிழக்கு மாகாண சபை வீதியில் இருந்து கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை நடை பவணியாக பதாகைகளை ஏந்தியவாறு கடும் வெயிலில் பலர் குழந்தைகளுடன் நடந்து சென்றனர்.
பேச்சு வார்த்தை போதும் இனி நியமனத்தை வழங்கு உள்ளிட்ட பல வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சம் இன்றி தொழிலை வழங்கு என்ற பிரதான வாசகம் ஊடான கோசங்களை இதன் போது எழுப்பினர்.
இதன் போது கிழக்கு ஆளுனர் செயலக முன்றலில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர் அத்துடன் ஆளுநர் செயலகத்தில் மஹஜரும் கையளித்தனர். இதில் நூற்றுக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.