200 தொழிற்சங்கங்கள் இன்று ‘சுகவீன விடுமுறை’ போராட்டத்தில் குதிக்கின்றன – நாடு முடங்கும் நிலை

இன்று திங்கட்கிழமையும் நாளை செவ்வாய்க்கிழமையும் அரச சேவை துறைகளை சேர்ந்த 200இற்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடுகின்றன. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாளை செவ்வாய்க் கிழமை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கமும் போராட்டத்தில் ஈடுபடுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

அஞ்சல் சேவைகள், நில அளவைத் திணைக்களம், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொது முகாமைத்துவ உதவியாளர்கள், தபால் தொலைத்தொடர்பு சேவையினர், சமூக சேவைகள் உத்தியோகத்தர், கால்நடை போதனாசிரியர்கள், அரச தாதியர்கள், பல்கலைக்கழக ஊழியர் சங்கங்களை சேர்ந்தவர்களே இந்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கேற்ப சம்பளம் உட்பட்ட கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவில்லை, நீண்டகாலமாக நிலவிவரும் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்படவில்லை, ஏற்றுக்கொள்ளப்பட்ட சம்பள அதிகரிப்புகள்கூட வழங்கப்படவில்லை, 2019 இலிருந்து பெரும்பாலான ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆளணி வெற்றிடங்கள் நிரப்பப்படவில்லை, தொழில் சார் உரிமைகள் மற்றும் சலுகைகள் தொடர்பிலான பல பிரச்னைகளுக்கு தீர்வுகள் இல்லை ஆகிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது