அரச ஊழியர்களுக்கு வேதன உயர்வு இல்லை – ஜனாதிபதி ரணில்

தேர்தல் காலம் நெருங்கி வருவதால் இந்த வருடம் அரச பணியாளர்களுக்கு மீண்டும் வேதனத்தை அதிகரிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய சூழ்நிலையில் வேதனத்தை அதிகரித்தாலும் அதனைச் செலுத்துவதற்கு அரசாங்கத்திடம் போதியளவு நிதி இல்லை.
எனவே, வரியை அதிகரிக்க வேண்டி ஏற்படும். தற்போது பெறுமதி சேர் வரி 18 சதவீதமாக உள்ள நிலையில், வேதனத்தை அதிகரிப்பதாயின் குறித்த வரி வீதம் 19 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும். அத்துடன், அரச சேவையில் 10 இலட்சம் பணியாளர்களே இருக்க வேண்டும் என்ற போதிலும், தற்போது 15 இலட்சம் ஊழியர்கள் உள்ளனர்.

அதேநேரம், இந்த வருடத்தின் நடுப்பகுதியிலிருந்து ஜனாதிபதி தேர்தலுக்கும், நாடாளுமன்ற தேர்தலுக்கும் தயாராக வேண்டும். எனவே, வேறு பணிகள் தொடர்பில் அவதானம் செலுத்த முடியாது என்பதுடன், இந்த வருடத்தில் அரச பணியாளர்களுக்கான மீண்டுமொரு வேதன அதிகரிப்பு என்பது சாத்தியமற்றது” என்றும் ஜனாதிபதி கூறினார்.