தோ்தலை ஒத்திவைக்கக் கோரி மற்றொரு மனு தாக்கல்

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்குமாறு உத்தரவிடக் கோரி சட்டத்தரணி அருண லக்சிறி உயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் இன்னும் முறையாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாத நிலையில் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்குமாறு சட்டத்தரணி தனது மனுவில் கோரியுள்ளார். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறும் அவர் கோரியுள்ளார்.

இதேவேளை, அண்மையில் ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவுக்கு வரும் திகதி தொடர்பில் உயர் நீதிமன்றம் பொருட்கோடலை வழங்கும் வரை ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதை தடுக்கும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தொழில்முயற்சியாளர் ஒருவரால் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

1978-ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதியின் பதவிக் காலம் 6 ஆண்டுகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், அரசியலமைப்பின் 19-வது திருத்தத்தின் 3-ஆவது சரத்துக்கு அமைய அரசியலமைப்பின் 30 (2)- ஆவது பிரிவு திருத்தப்பட்டாலும், அதனூடாகக் குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதியின் பதவிக் காலம் நிறைவடைவது 5 வருடங்களா அல்லது 6 வருடங்களாக என்பதில் குளறுபடி நிலவுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அரசியலமைப்பின் 19-வது திருத்தத்தின் கீழ் அதிகாரத்திலுள்ள ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 வருடங்கள் வரை குறைப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றாலும், அது நடத்தப்படவில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது கடந்த திங்கட்கிழமை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது தெரிந்ததே.

இந்த நிலையிலேயே மற்றொரு மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.