தமிழரசுக் கட்சி வழக்கு ஜூலை 30 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வழக்கில் மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன் உட்பட 4 எதிராளிகள் இன்று தமது பதில் மனுக்களைத் தாக்கல் செய்வர் என முன்னாயத்தக் கூட்டத்தில் உறுதி அளித்த போதிலும் அதை அவர்களின் சட்டத்தரணிகள் இன்று திருமலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. அதனால் வழக்கு மேலும் 11 தினங்களுக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

இதேசமயம் வழக்கில் இடையீட்டு எதிராளியாகத் தன்னைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விண்ணப்பித்துள்ள சிறீதரன் தரப்பு ஆதரவாளரான – கிளிநொச்சியைச் சேர்ந்த ஜீவராஜா தமது விண்ணப்பத்தில் உறுதியாக நின்றமையால் அது தொடர்பான எழுத்து மூல ஆட்சேபனைகளைப் பிற எதிராளிகள் சமர்ப்பிப்பதற்கு ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியது.

இந்த இரண்டு விடயங்களிலும் முடிவு எட்டப்பட்ட பின்னரே வழக்கு அடுத்த கட்டத்துக்கு நகரும் என்றும் அதுவரை இழுபறி நிலைமை தொடரும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

வழக்குத் தொடர்பாக மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன், சண்முகம் குகதாசன், சீனித்தம்பி யோகேஸ்வரன் தவிர்ந்த ஏனைய நான்கு எதிராளிகளான சுமந்திரன், குலநாயகம், சத்தியலிங்கம், இரத்தினவடிவேல் ஆகியோர் சார்பிலான பதில் மனுக்கள் இன்று நீதிமன்றத்தில் சட்டத்தரணி சுமந்திரனினாலும் அவர்களின் பிற சட்டத்தரணிகளினாலும் சமர்ப்பிக்கப்பட்டன.

இதனையடுத்து எதிர்வரும் 30ஆம் திகதி ஏனைய 4 எதிராளிகளும் பதில் தாக்கல் செய்வதற்குக் கால அவகாசம் வழங்கி வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.