பங்களாதேஷில் தொடரும் வன்முறை: 130க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

பங்களாதேஷில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீட்டை எதிர்த்து அரசுக்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதால் அங்கு ஏற்பட்டுள்ள வன்முறை கட்டுக்கடங்காமல் முன்னெடுக்கப்படுகிறது.

இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டு நாடு முழுவதும் வன்முறைகள் வெடித்ததையடுத்து அரச தொலைக்காட்சி நிலையத்துக்கும் தீவைக்கப்பட்டது.

தலைநகர் டாக்காவின் வடக்கே அமைந்துள்ள நர்சிங்டி நகரில் உள்ள சிறைச்சாலைக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததைத் தொடர்ந்து சுமார் 800 கைதிகள் சிறையில் இருந்து தப்பியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

எனினும், வன்முறை கட்டுப்பாட்டுக்குள் வராததால் நாடு முழுவதும் கடுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸாருடன் இராணுவமும் களமிறக்கப்பட்டுள்ள போதிலும் வன்முறை கட்டுக்குள் வராது தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது.

இந்த வன்முறையால் இதுவரை 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்தநிலையில் வன்முறையையும் போராட்டத்தையும் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்ற நிலையில், ஊரடங்கை மீறி வன்முறையில் ஈடுபடுவோரைக் கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.