பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம்: வெளியிடப்பட்ட வர்த்தமானி இரத்து

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1,700 ரூபா வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து தொழில் அமைச்சின் செயலாளர்  வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 21ஆம் திகதி தம்மால் வெளியிட்ட வர்த்தமானி இரத்து செய்யப்படுவதாக தெரிவித்து தொழில் அமைச்சின் செயலாளர் ஆர்.பி.ஏ.விமலவீர இம்மாதம் 10ஆம் திகதியிடப்பட்ட புதிய அதிவிசேட வர்த்தமானியை வௌியிட்டுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1,700 ரூபாவை நிர்ணயித்து தொழில் ஆணையாளரால் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வர்த்தமானியொன்று வௌியிடப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் 21ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சின் செயலாளர் ஆர்.பீ.ஏ.விமலவீர  மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டிருந்தார்.

இந்த வர்த்தமானியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக 1,350 ரூபாவும் விசேட கொடுப்பனவாக 350 ரூபாவும் மேலதிக கொழுந்து கிலோகிராம் ஒன்றுக்கு 80 ரூபா வீதம் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.