‘தமிழர்கள் தேர்தலை முற்றாக பகிஷ்கரிக்க வேண்டும்’: கஜேந்திரன் அழைப்பு

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும்  தேர்தல் மீது முற்றாக நம்பிக்கையிழந்துள்ள தமிழ் மக்களை இலங்கையர் என்ற அடையாளத்துக்குள் வைத்துக்கொள்ளவே தமிழ் பொது வேட்பாளர் என்ற நாடகம் அரங்கேற்றப்படுவதாக  கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

”இலங்கையில் இனவாதத்துக்கு முற்றுப்புள்ளிவைக்கப்பட்டு அனைவரும் சம உரிமைகளுடன் வாழ வேண்டும் என்றால் ஒற்றையாட்டிச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து சமஷ்டி அரசியலமைப்பொன்று கொண்டுவரப்பட வேண்டும்.

சமஷ்டி அரசியலமைப்பின் ஊடாக தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதன் ஊடாகவே நாட்டை ஆரோக்கியமான வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்ல முடியும்.

நாடாளுமன்றில் கோடி கணக்கில் நிதியை செலவழித்து செய்யப்படும் விவாதங்கள் மற்றும் செயல்பாடுகளின் ஊடாக ஆக்கப்பூர்வமான முடிவுகளை எடுக்க வேண்டும்.

சவால்களை எதிர்கொண்டுள்ள இந்த நாட்டை மீட்டெடுக்க ஒற்றையாட்சி முறையை ஒழிப்பது முதலாவது அவசியமான விடயம்.

ஸ்ரீலங்கா இராணுவம் எங்கள் தேசத்தின் மீது காடையர்கள் கொண்டு இன அழிப்பை கட்டவிழ்த்துவிட்டு பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்ற ஒரு தினத்தை எம்மால் மறக்க முடியாது.

வெலிகடை சிறையில் குட்டிமணி, தங்கமணி என்ற இரண்டு இளைஞர்கள் கண்கள் தோண்டப்பட்டு படுகொலைப்பட்ட சம்பவத்துக்கு நேற்று நீதி அமைச்சர் சபையில் மன்னிப்பு கோரினார்.

2009இல் மகிந்த மற்றும் கோட்டாபய தலைமையில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை கொண்ட இனப்படுகொலையொன்று இடம்பெற்றது. அவற்றுக்கெல்லாம் இன்னமும் நீதி கிடைக்கவில்லை.

சிங்கள மக்களுடன் இணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்ப நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், இந்த நாட்டில் ஒற்றையாட்சி முறை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசியலமைப்பொன்று கொண்டுவரப்பட்டு எங்கள் தேசம் ஓர் இறைமையுள்ள தேசியமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலொன்று நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறுமா இல்லையா என்ற சந்தேகமும் உள்ளது. சமஷ்டி அரசியலமைப்புக்கான கோரிக்கையொன்றை தென்னிலங்கை முன்வைக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறோம்.

இல்லாவிட்டால் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஒற்றையாட்சியை நிராகரிக்க நீங்கள் தயாராக இல்லை என்றால் அவர்களை தமிழ் மக்கள் ஆதரிக்க கூடாது.

2005இல் பிரபாகரன் எடுத்த தீர்மானத்தை போன்றதொரு தீர்மானத்தை நாம் எடுக்க வேண்டும். தேர்தல்மீது தமிழ் மக்கள் வெறுப்படைந்துள்ள சூழலில் வடக்கு, கிழக்கில் உள்ள சிவில் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் இணைந்து பொது வேட்பாளர் என்ற ஒரு சதியை அரங்கேற்றுகின்றனர்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு இரண்டு ஆண்டுகாலம் ஆட்சியை தொடர அனுமதி வழங்க வேண்டுமென்ற அரசியல் வாதிகளே வடக்கு, கிழக்கில் பொது வேட்பாளர் ஒருவரை களமிறங்க முயற்சிக்கின்றனர்.

ரணில், சஜித், அனுர ஆகிய மூவருக்கும் தமிழர்கள் பகிஷ்கரிப்பு என்ற ஒரு ஆயுதத்தை கையில் எடுக்க கூடாதென்ற தேவை உள்ளது. அவர்கள் இலங்கையர்கள் என்ற அடையாளத்தை நிராகரிக்கும் ஒரு நிலைமை வரக் கூடாது என்பதே அவர்களின் நிலைப்பாடு.

அதற்காகவே தமிழ் பொது வேட்பாளர் என்ற நாடகம் அரங்கேற்றப்படுகிறது. வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் முற்றாக இந்த தேர்தலை முடிவெடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கிறோம்.” என்றார்.