தொடர்ச்சியாக தவணையிடப்படும் குருந்தூர்மலை விவகார வழக்கு!

குருந்தூர்மலை தொடர்பான வழக்கு ஒன்று இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் அது மீண்டும் அடுத்த வருடத்திற்கு தவணையிடப்பட்டுள்ளது.

B1053 /2022 என்ற இலக்கமுடைய வழக்கு தொடர்ச்சியாக தவணைகள் வழங்கப்பட்டு நடைபெற்று வந்த நிலையில் இன்றையதினம் குறித்த வழக்கு இடம்பெற்றிருந்தது. குறித்த வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் இரத்தினராசா மயூரன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

இந்நிலையில், வழக்கு விசாரணை விவாதங்கள் நடைபெற்றது. இதனையடுத்து 2025 ஆம் ஆண்டு ஆண்டு தை மாதம் 16 ஆம் திகதிக்கு வழக்கு மீண்டும் நீண்ட கால இடைவெளியின் பின்னர் தவணையிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்புகள் மதிக்கப்பட வேண்டும், சைவ வழிபாடுகளை மேற்கொள்ள எந்தவித இடையூறுகளும் விளைவிக்க கூடாது , குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளில் நில அபகரிப்பு தடுக்கப்பட வேண்டும் என தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் கடந்த 2022.09.21 குருந்தூர் மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அவ் ஆர்ப்பாட்டத்தில் மக்களோடு கலந்து கொண்ட முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், சமூக செயற்பாட்டாளர் இரத்தினராசா மயூரன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோரை விசாரணைகளை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு பொலிஸார், பொலிஸ் நிலையம் வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர். இந்நிலையில் பொலிஸ் நிலையம் சென்றவர்களை பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.