தமிழ் வளர்த்த அன்னை என போற்றப்படும் ஒளவையாருக்கு மட்டக்களப்பில் இன்று மாலை பிரமாண்ட விழா நடாத்தப்பட்டது.கல்லடி காலத்தில் உள்ள தமிழ் பாட்டி ஒளவையின் சிலையருகில் இந்த நிகழ்வு சிறப்பாக நடாத்தப்பட்டது.
வேல்முருகன் சகோதரர்களின் அனுசரணையுடன் கதிரவன் பட்டிமன்ற பேரவையினால் ஒளவை விழாவாக சிறப்பாக நடைபெற்றது.
கதிரவன் பட்டிமன்ற பேரவையின் தலைவர் த.இன்பராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆன்மீக அதிதிகளாக சிவயோகச்செல்வன் சாம்பசிவ சிவச்சாரியார்,அருட்தந்தை ஜோசப்மேரி அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கலாரஞ்சினி கணேசலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டதுடன் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அதிதிகள் அழைத்துவரப்பட்டு தமிழ் பாட்டி ஒளவையின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமானது.
மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் யோகாசன நிகழ்வுகளும் நடைபெற்றன.
அத்துடன் ஒளவை விழாவினையொட்டி நடாத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிவுகளும் வழங்கப்பட்டன.