கட்சியை நாசமாக்கிவிட்டீர்கள்; கடுஞ்சொற்களால் மைத்திரிக்கு சந்திரிகா கடிதம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை நாசமாக்கி அதனை முற்றாக ஒழிக்க முயன்ற பெருமை உங்களையே சாரும்.கட்சியில் இருந்து என்னை நீக்க நீங்கள் யார்? அரசியலில் நீங்கள் ஒரு செல்லாக்காசு ஆகிவிட்டீர்கள்

இவ்வாறு தெரிவித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கு காட்டமான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.

13 பக்கங்களைக் கொண்ட அந்தக் கடிதத்தில் சிறிசேனவைக் கடும் வார்த்தைப்பிரயோகங்களால் விளாசித் தள்ளியுள்ள சந்திரிகா , ஐ.தே.க. வழங்கிய பதவியை வைத்து பின்னர் உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்த ஒருவர் என்று மைத்திரியைக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்தனகல்ல தேர்தல் தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கியமை தவறென்றும் அது செல்லுபடியாகாதென்றும் குறிப்பிட்டுள்ள சந்திரிகா , சுதந்திரக்கட்சியை எந்தக் கொம்பனாலும் இல்லாமலாக்க முடியாதென்றும் குறிப்பிட்டுள்ளார்.