உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நினைவேந்தல்கள் நடைபெற்றுவருகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கடும் சேதத்தினையும் உயிரிப்பினையும் எதிர்கொண்ட மட்டக்களப்பு சீயோன் தேவாலய முன்றிலில் உயிரிழந்தவர்களுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
குறித்த தேவாலயம் மீது ஸக்ரான் தலைமையிலான ஐஸ்ஐஸ் தீவிரவாதிகள் நடாத்திய குண்டுத்தாக்குதலில் 31பேர் உயிரிழந்ததுடன் 80க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
இவர்களை நினைவுகூரும் வகையில் சீயோன் தேவாலய முன்றிலில் மக்கள் மெழுதிரிக்கு ஒளியூட்டி அஞ்சலி செலுத்தினர்.
தேவாயலத்தின் நிர்மாணப்பணிகள் பூர்த்தியடையாத நிலையில் பிரதான வாயில் மூடப்பட்டு அந்த இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இது இவ்வாறிருக்க,
மட்டக்களப்பு காந்திபூங்காவில் அமைக்கப்பட்டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களின் நினைவுத்தூபியில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு மாநகரசபை ஏற்பாட்டில் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,மாநகரசபை பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,ஆணையாளர் க.சித்திரவேல்,மாநகரசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காக மெழுகுதிரி ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் உயிரிழந்தவர்களினை நினைவுகூர்ந்து மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.