மாவீரர் நாளை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொது இடங்களில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு இருந்தன.
புதிய ஆட்சி பொறுப்பேற்றதை தொடர்ந்து மாவீரர் நாளை தடுக்கும் வகையில் நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவுகள் பெறப்பட்டிருந்த நிலையில் இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் தீவிர பாதுகாப்புக்குட்படுத்தப்பட்டிருந்ததுடன் மாவட்டத்தின் முக்கிய இடங்கள் தீவிர கண்காணிப்புக்குட்படுத் தப்பட்டது.
இதேவேளை மட்டக்களப்பு வாகரை கண்டலடி பகுதியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்த மாவீரர் கல்லரைகள் இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தின் கல்லறைகள் உடைக்கப்பட்டுள்ளதாககவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிட்டிகள் விற்பனை செய்வோரும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
நாளை ஞாயிற்றுக்கிழமை இந்துக்களின் மிக முக்கிய நிகழ்வான கார்த்திகை விரதம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில், அதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பாகங்களில் சிட்டி விற்பனை சூடுபிடித்துள்ளன.
இந்த நிலையில் மாவீரர் தினத்திற்கு சிட்டிகள் விற்பனை செய்யப்பட்டனவா என்ற கோணத்தில் சிட்டி விற்பனையாளர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.
இதவேளை நேற்றைய தினம் ஆறு பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அதே நேரம், மட்டக்களப்பில் மாவீரர் நாள் உணர்வெழுச்சியுடன் அரசியல் தலைர்கள் தமது இல்லங்களில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.