திருகோணமலையில் இலங்கை அரச படையினரால் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 திகதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களின் 15ஆம் ஆண்டு நினைவுள் தமிழ் தேசிய கட்சியின் வல்வெட்டித்துறை அலுவலகத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
திருகோணமலையிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் குறித்த 5 மாணவர்களும் பாடசாலை கல்வியை முடித்த பின்னர் பல்கலைக்கழக உயர் கல்விக்கான அனுமதியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்கள்.
2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி மாலை திருகோணமலை கடற்கரை பகுதியில் பொழுது போக்குக்காக கூடியிருந்தவேளை ஆட்டோவொன்றில் வந்த ஆயுததாரிகளினால் அழைத்துச் செல்லப்பட்டு காந்தி சிலை சுற்று வட்டத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவமானது மிக மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்களில் ஒன்று என உள் நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் கண்டனங்கள் எழுந்தன.
ஆனாலும் இந்த மாணவர்களின் படுகொலைக்கு இன்னமும் நீதி கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் இடம் பெற்று 15 வருடங்கள் கடந்து விட்டாலும் திருகோணமலை மாவட்டத்தில் இடம் பெற்ற மனித படுகொலை சம்பங்களில் இந்நிகழ்வும் மறக்க முடியாத ஒரு அத்தியாயமாகவே இருக்கின்றது.