லடாக் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த இந்திய – சீன இராணுவ வீரர்களை திரும்பப் பெறும் பணிகள், ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எல்லைப் பிரச்னை காரணமாக, கடந்த ஆண்டு முதல், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.
இதைத் தொடர்ந்து லடாக் எல்லைப் பகுதியில், இருநாட்டு இராணுவத்தினரும் குவிக்கப்பட்டதால், பதற்றம் ஏற்பட்டது.
இதற்கிடையே, பதற்றத்தை தணிக்க, இருதரப்பு இராணுவ மூத்த அதிகாரிகள், பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர்.
கடந்த, 24ம் திகதி, மோல்டோ ஷுஷூல் எல்லைப் பகுதியில் நடந்த, ஒன்பதாம் கட்ட பேச்சு வார்த்தையில், எல்லையில் இருந்து இராணுவ வீரர்களை திரும்பப் பெற, இருதரப்பும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, சீன இராணுவ அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கேணல் வூ கியான் கூறுகையில், “கிழக்கு லடாக்கில் உள்ள பான்காங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரையோரம் குவிக்கப்பட்டிருந்த இருநாட்டு இராணுவ வீரர்களை திரும்பப்பெறும் பணிகள் துவங்கி உள்ளன.
ஒன்பதாம் கட்ட பேச்சில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார். எனினும், சீனா தரப்பில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை குறித்து, இந்திய அரசு, இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.