இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகின்ற நிலையில், கொரோனாவால் சாவடைபவர்களின் எண்ணிக்கையும் தினந்தோறும் உயர்வடைந்து வருகின்றது.
கொரோனாத் தொற்றால் மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 709 ஆக அதிகரித்துள்ளது.
7 ஆண்களும், 6 பெண்களுமே கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் பட்டியலில் நேற்றுப் பதிவாகியுள்ளனர். கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயது பெண், திவுலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயது பெண், ஜா – எல பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயது பெண், மாவில்மட பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயது ஆண், நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயது ஆண், மாலபே பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயது ஆண், மாலபே பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயது பெண், பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயது ஆண், நுவரெலியா பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயது ஆண், முகத்துவாரம் பிரதேசத்தைச் சேர்ந்த 79 வயது பெண், நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயது ஆண், பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயது பெண், புலத்சிங்ஹல பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயது ஆண் ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.