கல்விச் சமூகத்தின் அயராத முயற்சிக்கு கிடைத்த வெற்றியே வவுனியா பல்கலைக்கழகம் என முன்னாள் வடக்கு மாகாண சுகாதாரத் துறை அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்
நீண்ட வருடங்களாக யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமாக இயங்கிவந்த வவுனியா பூவரசங்களம் பகுதியில் உள்ள பல்கலைக்கழக வளாகம் ஆணி முதலாம் திகதி முதல் சுயாதீனமான பல்கலைக்கழகமாக இயங்கும் என்று அரசு வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது
இதில் பல அரசியல்வாதிகள் தங்களால் தான் வவுனியா பல்கலைக்கழக வளாகம் சுயாதீன பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டுள்ளது என்று சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக முன்னாள் வடக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கருத்து தெரிவிக்கையில்,
‘வவுனியாவின் புதிய அடையாளமாக இருப்பது “வவுனியாப் பல்கலைக்கழகம்” யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் வவுனியா வளாகத்தை வவுனியா பல்கலைக்கழகமாக மாற்ற எடுத்த முயற்சி என்பது ஒரு வரலாறு. இதில் பலர் முழுமூச்சாக ஈடுபட்டார்கள்.
சமூக அக்கறை கொண்டவர்கள், கல்விச்சமூகத்தினர், வவுனியா வளாகத்தினர் மற்றும் அரசியல் பிரதிநிகள் என பலர் இதற்காக உழைத்தார்கள். இதற்காக கடந்த காலங்களில் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து ஊர்வலங்கள் கூட நடைபெற்றது
அதேவேளை இதை தடுத்து நிறுத்தவென ஒரு கூட்டம் உள்ளேயும் வெளியேயும் பலகாரணங்களை கூறிக்கொண்டு செயற்பட்டது. கடந்த 2018- 19 காலப்பகுதியில் ரவூப் ஹக்கீம் அவர்கள் உயர் கல்வி அமைச்சராக இருந்த பொழுது வவுனியா பல்கலைக்கழகம் தொடர்பாக நாங்கள் சிலர் நேரில் சென்று வலியுறுத்தினோம். எது எப்படியோ ஆவணி 1இல் இருந்து சுயாதீனமான வவுனியா பல்கலைக்கழகமாக இயங்கும் என்று அரசு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது
ஒரு பல்கலைக்கழகத்திற்கான ஆளணி, பெளதீக வளங்கள் இன்னும் பல தேவைகளை நிவர்த்தி செய்யவேண்டிய நிலையிலேயே ஒரு குழந்தை போன்று சுயாதீனமாக நடக்க தொடங்குகிறது. இவ்வேளையில் அனைவரதும் ஆதரவு இருந்தால் மட்டுமே திடமான அடியெடுத்து வைக்கமுடியும்.
“இது எமக்கானதாக இருப்பது எமது கைகளிலேயே உள்ளது” ஒற்றுமையே பலம்” என்றார்.