கிழக்கு மாகாண மாணவர்களின் கல்வி செயற்பாடுகளில் அரசுக்கு அக்கறையில்லை–இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு
கிழக்கு மாகாணத்தில் 1113 பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர் களின் கல்வி சடவடிக்கைகளை தொடர்வதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்கவேண் டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளும் அவர்களது உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு – இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் அரசுக்கு எதிராக மாவட்ட இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்க மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொ.உதயரூபன் உள்ளிட்டோர் இந்த முறைப்பாட்டை மட்டக்களப்பில் பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்க மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொ.உதயரூபன்,
“இலங்கையில் சுமார் ஒரு வருடமும் மூன்று மாதங்களாக பாடசாலை மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில், அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கையும் எந்தவிதமான தீர்வும் வழங்காததால் இந்தகாலகட்டத்தில் நாம் இந்த முறைப்பாட்டை செய்துள்ளோம். கிழக்கு மாகாணத்தில் 1113 பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் அவர்களின் கல்வி சடவடிக்கைகளை தொடர்வதற்கு இந்த அரசு முயலவேண்டும்.
ஒன்லைன் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த காலகட்டத்தில் பெரும்பாலான மாணவர்களுக்கு சமவாய்ப்பு இல்லாத நிலை ஏற்படுள்ள காரணத்தினால் பல்வேறு மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளில் இடைவிலகல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்டிருக்கும் தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதில் காட்டும் அக்கரையினை ஏன் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் அரசாங்கம் காட்டுவதில்லை.
ஆசிரியர்களை கூட்டங்களுக்கு வற்புறுத்தி அழைக்கின்றனர். ஆனால் எந்தவிதமான ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி வழங்கவில்லை. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது” என்றார்.