இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதர் வெங்கடேஸ்வரன் நேற்று புதுச்சேரி சென்ற போது, ஆளுநர் மாளிகையில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் இருநாட்டு நல்லுறவுகள், அரசியல் பண்பாட்டு தொடர்புகள் குறித்து பேசினர்.
புதுச்சேரியில் வாழ்ந்த பாரதியார், பாரதிதாசன், அரவிந்தர் ஆகியோர் குறித்தும், புதுச்சேரியின் சிறப்புகள் குறித்தும் துணைத் தூதரிடம் ஆளுநர் விளக்கினார். புதுச்சேரி தூய்மையான நகரமாக இருப்பதாக தெரிவித்த துணைத் தூதர், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
இதனை தொடர்ந்து புதுவை சட்டசபை அலுவலகத்தில் முதலமைச்சர் ரங்கசாமியை துணை தூதர் வெங்கடேஸ்வரன் சந்தித்து பேசினார். இது தொடர்பாக வெங்கடேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கை – காரைக்கால் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.
இதன்பின்னர் காரைக்கால் சென்ற வெங்கடேஸ்வரன், அங்கு மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மாவை சந்தித்து பேசினார். பின்னர் அங்குள்ள தனியார் துறைமுகத்துக்கு சென்று அவர் பார்வையிட்டார்.