வவுனியா தாண்டிக்குளம் சாந்தசோலை பிரதான ஏ9 வீதியில் இன்று சௌபாக்கியா கிராம நிகழ்ச்சித் திட்டம் மேற் கொள்வதற்கு அநுராதபுரத்தில் இருந்து வந்த புகையிரதத் திணைக்கள உத்தியோகத்தர்கள் சிலரினால் இடையூறு ஏற்படுத்துவதாக கிடைத்த தகவலை சேகரிப்பதற்குச் சென்ற ஊடகவியலாளருக்கு அங்கு சிவில் உடை தரித்து நின்ற காவல் துறை அதிகாரியினால் இடையூறு ஏற்படுத்தப் பட்டுள்ளது .
ஜனாதிபதியின் எண்ணக் கருவிற்கு அமைவாக கிராமங்கள் தோறும் சௌபாக்கியா கிராம நிகழ்ச்சித் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் நாளைய தினம் 13.07.2021 வவுனியா சாந்த சோலையில் சௌபாக்கியா பன்னீர் உற்பத்திக் கிராம நிகழ்சித் திட்டம் அங்குரார்ப்பன நிகழ்வு இடம் பெறவுள்ளது .
இந்நிகழ்வை ஏற்பாடு செய்வதற்காக அங்கு சென்ற பொது மக்களை அநுராதபுரத்தில் இருந்து வந்த புகையிரதத் திணைக்கள உத்தியோகத்தர்கள் தடுத்து அவர்களது கடமைகளை செய்ய விடாமல் தடுக்கப்பட்டனர். இவ்வியடம் குறித்து அப்பகுதி கிராம அலுவலகர் ஊடாக பிரதேச செயலாளருக்கு அறிவிக்கப்பட்டது
இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பிரதேச செயலாளர் புகையிரதத் திணைக்கள உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடி நாளை இடம் பெறவுள்ள நிகழ்வுகளை தடுப்பதற்கு மேற் கொண்ட முயற்சிகளை முறியடித்துள்ளார். இந்நிலையில் அச்சம்பவங்களைச் சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளரின் கடமைகளுக்கு அங்கு சிவில் உடையிலிருந்த காவல் துறை அதிகாரி ஒருவர் இடையூறுகளை ஏற்படுத்தி அச்சுறுத்தும் நடவடிக்கையையும் மேற் கொண்டார் .
இவ்வாறு காவல் துறை சிவில் உடைகளில் வந்து பொது மக்களின் தகவல்களை சேகரிக்கும் ஊடகவியலாளர்களின் கடமைகளுக்கு இடையூறுகளையும் அச்சுறுத்தும் நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்துவதற்குரிய ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை மேற் கொண்டு ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கு உரிய நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு என்பன எடுக்கப்பட வேண்டும்.