வவுனியா பல்கலைக் கழகத்தின் முதலாவது துணை வேந்தராக கலாநிதி ரி.மங்களேஸ்வரன் நியமிக்கப் பட்டுள்ளார்.
யாழ். பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா பல்கலைக் கழகமாக கடந்த மாதம் தரம் உயர்த்தப் பட்டிருந்தது. எதிர்வரும் 8 ஆம் மாதத்தில் இருந்து பல்கலைக் கழகத்தின் அனைத்து செயற்பாடுகளும் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப் படவுள்ளது.
இந்நிலையில் பல்கலைக் கழகத்தின் முதலாவது துணை வேந்தராக ஏற்கனவே முதல்வராக கடமை வகித்த கலாநிதி ரி.மங்களேஸ்வரன் நியமிக்கப் பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பளையை சேர்ந்த இவர், 1999 ஆம் ஆண்டு வவுனியா வளாகத்தில் விரிவுரையாளராக தனது கடமையினை ஆரம்பித்திருந்தார். பின்னர் வளாகத்தின் பல்வேறு உயர் பதவிகளையும் வகித்துள்ளதுடன், 2015 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை வவுனியா வளாகத்தின் முதல்வராக பதவி வகித்து வந்தார். தற்போது துணை வேந்தராக நியமிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
இதேவேளை பொதுநலவாய அமைப்புகளின் மூலம் கிடைக்கப் பெற்ற புலமைப் பரிசில் மூலம் கலாநிதிப் பட்டத்தினையும் அவர் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.