கொரோனா முடக்க காலத்தில் இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான இணைய வழி பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பெண்கள் உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
கடந்த வருடம் முதல் கொரோனா தொற்று காலத்தில் பல சந்தர்ப்பங்களில் நாடு முடக்கப்பட்டிருந்தது. இக்கால கட்டத்திலேயே இந்த குற்றச் சம்பவங்கள் பிரதான இடத்தை வகித்தன என குறித்த அமைப்புக்கள் சுட்டிக் காட்டியுள்ளன.
மேலும் பெண்கள் அபிவிருத்தி நிதியத்தின் ஏற்பாட்டாளரான ஈ.எம்.பண்டார மெனிக்கே தகவல் தருகையில், “இக்கால கட்டத்தில் பெண்களுக்கு எதிரான பொதுவான துன்புறுத்தல்கள் 33 வீதத்தால் அதிகரித்திருக்கும் அதே வேளை வீட்டு வன்முறை சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
இணைய வழி கற்றல் நடவடிக்கைகள் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன.
அத்துடன் சுதந்திர வர்த்தக வலயங்களில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் நிலை மிகவும் மோசமானதாக உள்ளது என இலங்கை தாய்மார்கள் மற்றும் மகள்மார் என்ற அமைப்பின் இணைப்பாளர் பத்மினி வீரசூரிய தெரிவித்துள்ளார்.
தொற்று காலத்தில் சில ஆடைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் மணியாற்றும் பெண்களுக்கு ஓய்வின்றி பணி வழங்குகின்றனர்.
சில தொழிற்சாலைகள் கிருமி நீக்கம் செய்யப்படவில்லை. இதுவும் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களே. ஆகவே இவ்வாறான சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்கு ஒரு ஒழுங்கு முறை அமைப்பு அவசியம்” என்றார்