ஜப்பானில் தொடங்கியிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஏதிலிகள் அணி சார்பாக 29 தடகள் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் உலகமெங்கும் இடம் பெயர்ந்துள்ள 82 மில்லியன் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலந்து கொண்டுள்ளனர்.
போர், பயங்கரவாதம், வறுமை, வன்முறை என பல காரணங்களுக்காக தங்கள் தாய்நாட்டை பிரிந்து வேறு ஒரு நாட்டுக்கு அடைக்கலம் நாடி செல்பவர்களே ஏதிலிகள். எந்தவித சிக்கலும் இல்லாமல் வாழ்க்கையை சுமுகமாக கடத்தி செல்லும் நோக்கத்திற்காகவே ஏதிலிகள் புகலிடம் தேடி செல்வது உண்டு.
இந்த நிலையில் ஏதிலிகளும் ஒலிம்பிக்கில் பங்கேற்று விளையாட செய்யும் நோக்கில் உருவாக்கப் பட்டதுதான் ஏதிலிகள் ஒலிம்பிக் அணி. இந்த அணியை கடந்த 2015-இல் சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தாமஸ் பாக் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பின் படி 2016 ரியோ ஒலிம்பிக்கில் தடகளம், ஜூடோ மற்றும் நீச்சல் என மூன்று பிரிவுகளில் 10 வீரர்கள் பங்கேற்று விளையாடினர்.
இவர்கள் அனைவரும் எந்த நாட்டையும் சார்ந்திடாத Independent வீரர்களாக பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது.