கோடியக்கரை தென்கிழக்கு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதில் மீனவர் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
நாகபட்டினம் கீச்சாங்குப்பம் மீன்பிடித் துறை முகத்திலிருந்து அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த கௌதமன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கலைச்செல்வன் உள்ளிட்ட 10 பேர் கடந்த 28ஆம் திகதி மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
வேதாரண்யம் அருகே கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி படகில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக படகில் இருந்த மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதில் கலைச்செல்வன் என்பவருக்கு தலையில் இடதுபக்கம் காயம் ஏற்பட்டது. இதனால் மீனவர்கள் தங்களது மீன்பிடி விசைப் படகுடன் நாகப்பட்டினம் துறை முகத்திற்கு வந்தடைந்தனர்.
காயம் அடைந்த கலைச்செல்வன் நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.