எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இரண்டு விசைப்படகுகளைக் கைப்பற்றியதோடு இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கைதான மீனவர்களை மீட்டுத்தர உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடந்த 11 -ம் திகதி அதிகாலை 2.00 மணிக்கு அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சிவனேசன் மற்றும் சிவகுமார் என்பவர்களுக்குச் சொந்தமான விசைப்படகுகளில் அக்கரைப்பேட்டை, சமந்தன்பேட்டை, சந்திரபாடி, புதுப்பேட்டை, பெருமாள்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 23 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
இந்நிலையில் கடந்த 13ம் திகதி 8 மணியளவில் கோடியக்கரை தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்த இலங்கை கடற்படை நாகை மீனவர்களின் விசைப்படகை சுற்றி வளைத்து எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இரண்டு விசைப்படகுகளையும் படகிலிருந்த 23 மீனவர்களையும் கைது செய்தனர். இலங்கை பருத்தித்துறை கடல் பகுதியில் வைத்து கைது செய்ததாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
நன்றி – விகடன்