அமெரிக்க அரசின் வெளியுறவுச் செயலராக இருந்த காலின் பவல் கோவிட்-19 தொற்று காரணமாக அவரது 84ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
2001ஆம் ஆண்டு ஜார்ஜ் டபிள்யூ புஷ் அமெரிக்க அதிபராக தேர்தலில் வென்றபின் இவர் அமெரிக்க வெளியுறவுச் செயலரானார்.
ஆப்ரிக்க -அமெரிக்க பூர்விகத்தைக் கொண்ட அமெரிக்காவின் முதல் வெளியுறவுச் செயலர் இவராவார். அரசியலில் நுழையும் முன்னர் காலின் பவல் ஒரு இராணுவ அதிகாரியாக இருந்தவர்.
இராக் மீதான அமெரிக்காவின் படையெடுப்புக்கு இவர் வெளிப்படையாக ஆதரவளித்தது விமசனத்துக்கு உள்ளானது. பின்னர் அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொண்டார்.
சதாம் ஹுசேனின் ஆட்சியின் கீழ் இருந்த ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி அங்கு படையெடுத்த அமெரிக்கா, அப்படி எதையும் அங்கு கண்டுபிடிக்கவில்லை.
பின்னாளில் ஈராக் போர் குறித்து ஏபிசி செய்தி நிறுவனத்துக்கு காலின் பவல் ஒருமுறை அளித்தப் பேட்டியில், “அது ஒரு கருப்புப் புள்ளி. எனது வரலாற்றில் எப்போதும் அது இருக்கும். அது அப்போதும் வேதனை அளித்தது. இப்போதும் வேதனை அளிக்கிறது” என்று தெரிவித்தார்.
காலின் பாவெலின் மறைவு குறித்து அவரது குடும்பத்தினர் சமூக ஊடகத்தில் பகிர்ந்த செய்திக் குறிப்பில், “நாங்கள், ஒரு அன்பான கணவரை, தகப்பனை, தாத்தாவை ஒரு நல்ல அமெரிக்கரை இழந்துவிட்டோம். காலின் பாவெல் இரண்டு தடுப்பூசியும் செலுத்தியிருந்தார். இருப்பினும் அவருக்குக் கெொரோனா பாதித்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.