ஒட்டுமொத்த தமிழ்பேசும் மக்களின் வெறுப்பின் வெளிப்பாட்டைத்தான் காலப்போக்கில் ஜனாதிபதி சந்திப்பார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
அரசின் ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்ற கொள்கையை நடைமுறையாக்குவதற்காக ஆராய்ந்து, அறிக்கை சமர்பிக்கும்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முஸ்லீம்கள் உள்ளிட்ட 13 உறுப்பினர்களைக் கொண்ட செயலணியை நியமித்துள்ளார். இதில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பில் இரா.சம்பந்தன் கருத்து தெரிவிக்கையில்,“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசின் ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்ற கொள்கையை நடைமுறைப்படுத்த ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 13 உறுப்பினர்களைக் கொண்ட செயலணியை நியமித்துள்ளார்.
சிறைத்தண்டனை அனுபவித்த – தமிழ்பேசும் மக்களுக்கு எதிராக இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு வரும் ஒருவரை ஜனாதிபதி செயலணியின் தலைவராக எந்தவகையில் ஏற்றுக்கொள்ள முடியும்?
13 உறுப்பினர்களைக் கொண்ட இந்த விசேட ஜனாதிபதி செயலணியில் தமிழ்ப் பிரதிநிதி ஒருவரேனும் நியமிக்கப்படவில்லை. இது ஜனாதிபதியின் திட்டமிட்ட செயலா?