திருகோணமலை மாவட்டம் கந்தளாய் கல்வி வலயத்துக்குட்பட்ட தம்பலகாமம் கல்மிட்டியாவ சிங்கள வித்தியாலயத்துக்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று பெற்றோர்களால் நடத்தப்பட்டு வருகின்றது.
அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கு, மாணவர்களின் கல்வியை உறுதிப்படுத்து, கல்வி கற்பதற்கான உரிமைகளை உறுதிப்படுத்து, கல்வி ஊடாக தேசிய உற்பத்திக்கு ஆறு வீதம் ஒதுக்கு, தொற்று நோய் காரணமாக முடக்கப்பட்ட கல்வியை கட்டியெழுப்பு போன்ற வசனங்களை ஏந்தியவாறு பெற்றார்கள் இக் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
ஆசிரியர்களின் சம்பள உயர்வு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா மாவட்ட பாடசாலைகளில் பெற்றோர்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பபட்ட இலங்கை ஆசிரியர் சங்க பிரதிநிதிகளான அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் இணைந்து மல்லாவி நகர் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
கிளிநொச்சி மகாவித்தியாலயம் முன்பாக பாடசாலை சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் பலரும் கலந்து கொண்டு அதிபர் ஆசிரியர் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளளனர்.
அதே நேரம் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு ஆதரவாகவும், சம்பள முரண்பாடுகள் தொடர்பாகவும் பெற்றோர்களால் தற்போது பல பாடசாலைகளுக்கு முன்பாக போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை நீடிப்பது கவலை அளிப்பதாக தெரிவித்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் அதேவேளையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனவே, இதுபோன்ற செயல்கள் மாணவர்களின் கல்வியை பாதிக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.