மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாத அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் உறவுகளுக்கு வாழ்வாதாரம் வழங்க முனைவதற்கு காரணம் என்ன? என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப் பட்டவர்களின் அமைப்பின் இணைப்பாளர் கலாறஞ்சினி கேள்வி எழுப்பியுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களிற்கு ஒரு இலட்சம் ரூபாவை வழங்குவதற்கான யோசனையை நீதியமைச்சர் அலிசப்ரி அமைச்சரவையில் முன்வைத்திருந்தார். இவ் விடயம் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யுத்தம் முடிவடைந்து 13 வருடங்கள் ஆகிவிட்டன. எங்களுடைய உறவுகள் காணாமல் போகவில்லை. காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். ஐ.நாவில் 49 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளது குடும்பங்களிற்கு வாழ்வாதாரமாக ஒரு இலட்சம் ரூபா கொடுக்க போகிறதாக நானும் அறிந்தேன். ஆனால் இந்த பொருளாதார நெருக்கடிக்குள் அரசாங்கம் தன்னையே பாதுகாக்க முடியாத நிலையில் இருக்கின்ற போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு லட்சம் ரூபா கொடுப்பதற்கு காரணம் என்ன? என்பது எங்களுக்கு ஒரு கேள்வியாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.