தனது பிரஜையை மீட்ட பிரித்தானியா
பொருளாதார தடைகளைக் காரணம் காட்டி முடக்கி வைக்கப்பட்ட ஈரானின் 400 மில்லியன் பவுண்ஸ்களை மீண்டும் வழங்கி தடுப்புக் காவலில் இருந்த தனது இரு பிரஜைகளை பிரித்தானியா இந்த வாரம் மீட்டுள்ளது.
பிரித்தானியா மற்றும் ஈரானிய குடியுரிமைகளை கொண்ட நசானின் சகரி ரட்கிளிப் மற்றும் அனுர்சே அசூரி ஆகியவர்களே மீட்கப்பட்டவர்கள். மூன்றாவது நபரான முராட் ரபாஸ் என்பவர் பின்னர் விடுவிக்கப்படுவார் என ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் அரசை கவிழ்ப்பதற்கு முயற்சி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பிரித்தானியாவிடம் இருந்து 1500 சிப்ரான் ரக டாங்கிகளை வாங்குவதற்கு ஈரான் 400 மில்லியன் பவுண்ஸ்களை செலுத்தியிருந்தது. எனினும் 1979 ஆம் ஆண்டு இடம்பெற்ற இஸ்லாமிய புரட்சியை தொடர்ந்து பொருளாதாரத் தடை என்ற போர்வையில் பிரித்தானியா இந்த நிதியை முடக்கியிருந்தது.
எனினும் இந்த நிதியை பிரித்தானியா வழங்கவேண்டும் என வெளிவிவகார அமைச்சக அலுவலக அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி தெரிவித்திருந்ததார். நசானின் சகரி ரட்கிளிப் 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார்.
பிரித்தானியா அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டபோதும், அவர் விடுதலை செய்யப்படவில்லை. ஆனால் பிரித்தானியா நிதியை மீண்டும் ஈரானுக்கு வழங்கினால் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என ஈரானின் நாளேடு ஒன்று கடந்த ஆண்டு தெரிவித்திருந்தது.