எங்கள் மீது இராணுவ பலத்தை தென் கொரியா பயன்படுத்தினால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரியும் அவரது கொள்கை ஆலோசகருமான கிம் ஜோ யாங் எச்சரித்துள்ளார்.
கடந்த 2017க்குப் பின்னர் முதன் முறையாக சில நாட்களுக்கு முன் ஐசிபிஎம் எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை அதன் முழு தூரத்துக்கு ஏவி வட கொரியா சோதனை செய்தது.
இதனையடுத்து தென் கொரிய இராணுவத் தளபதி சூ வூக் கடந்த வாரம் முன்வைத்த விமர்சனத்தில், தென் கொரிய இராணுவத்திடம் ஏவுகணைகள் இருக்கின்றன. அவை வட கொரியாவின் எந்த ஒரு நகரத்தையும் துல்லியமாக தாக்கக் கூடியவை. வட கொரியா எங்களுக்கு எதிராக ஏவுகணையைப் பயனபடுத்தினால் நாங்களும் பயன்படுத்துவோம் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், “ஒரு பைத்தியக்காரர் பெரும் பிழை செய்துள்ளார். அவர் சொல்வது போல் எங்கள் மீது இராணுவ பலத்தைப் பயன்படுத்தினால் நாங்கள் அணு ஆயுதங்களைப் படுத்தத் தயங்கமாட்டோம். நாங்கள் அணு ஆயுதங்களை வைத்திருப்பது தற்காப்புக்காகத் தான். ஆனால் தென் கொரியா சீண்டினால் நிச்சயமாக அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம். எதிரிகள் பேரழிவை சந்திப்பர். அவர்களுக்கு அது பெருந்துயராக அமையும் என்று எச்சரித்துள்ளார் கிம் யோ ஜாங்.