பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் பாராளுமன்றத்தை இடைநிறுத்தம் செய்வதற்கு எடுத்த தீர்மானம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உடன்படிக்கையின்றி விலகுவதற்கு எதிர்ப்பைக் கொண்டவர்கள் ஆகியோர் கடும் சினத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் பிரதமரின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் பிரதமரின் பாராளுமன்றத்தை இடைநிறுத்துவதற்கான திட்டத்திற்கு எதிராக சட்ட ரீதியான சவால் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் கையொப்பமிட்டு முறைப்பாடொன்றை தாக்கல் செய்துள்ளனர்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திலிருந்து ஒக்டோபர் மாதம் வரையான 5 வாரங்களுக்கு பாராளுமன்றத்தை இடைநிறுத்தம் செய்வது பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது சம்பந்தமான பிறிக்ஸிட் செயற்கிரமம் தொடர்பில் விவாதத்தை நடத்துவதற்கான நேரத்தை அனுமதிப்பதாக உள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
இந்த நடவடிக்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உடன்படிக்கை எதுவுமின்றி விலகுவதற்கு முட்டுக்கட்டை போடுவதை தடுத்து நிறுத்த ஜனநாயகத்திற்குப் புறம்பாக முன்னெடுக்கப்பட்ட முயற்சியென அதன் எதிர்ப்பாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பாராளுமன்றத்தை இடைநிறுத்தம் செய்யும் மேற்படி திட்டத்திற்கு எலிஸபெத் மகாராணியார் நேற்று முன்தினம் புதன்கிழமை அனுமதியளித்துள்ளதாகவும் இது நிச்சயமாக பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உடன்படிக்கையின்றி வெளியேறுவதற்கான எதிர்ப்பிற்கு தடை ஏற்படுத்துவதற்கான ஒரு அரசியல் நகர்வல்ல எனவும் அமைச்சர் மைக்கேல் கொவ் தெரிவித்தார்.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட தினமான ஒக்டோபர் 31ஆம் திகதிக்கு பெருமளவு நேரம் உள்ளதாக அவர் கூறினார்.
பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவிக்கையில், பாராளுமன்றம் இடைநிறுத்தம் செய்யப்பட்டதற்கு பின்னர் எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி மகாராணியாரின் உரை இடம்பெறவுள்ளதாக குறிப்பிட்டார்.
”இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான திட்டங்களை முன்னெடுக்க பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியதற்கு பிற்பாடு வரை காத்திருக்க தான் விரும்பவில்லை” என போரிஸ் ஜோன்ஸன் கூறினார்.
மகாராணியாருடனான சந்திப்பின் போது பங்கேற்ற பாராளுமன்றத் தலைவர் ஜாகொப் றீஸ் மொக் கூறுகையில், இந்தப் பாராளுமன்றத்தின் கூட்டத் தொடரானது கடந்த 400 வருட காலத்திலேயே மிகவும் நீண்ட கூட்டத்தொடர் ஒன்றாக விளங்குவதால் அதனை இடைநிறுத்தி புதிய கூட்டத்தொடர் ஒன்றை ஆரம்பிக்க உரிமை உள்ளது என்று தெரிவித்தார்.