உக்ரைன் போர் காரணமாக உலகின் பல பகுதிகளில் பட்டினி பரவி வருவதாக ஐ.நா. சபை கவலை தெரிவித்துள்ளது.
உக்ரைனில் ரஷ்யாவின் போர் காரணமாக இதுவரை 4,50,000 பேர் வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.
உலகிலேயே அதிக அளவில் கோதுமை உற்பத்தி செய்யும் நாடுகளில் முதலிடத்தில் உக்ரைன் உள்ளது. போர் காரணமாக இங்கிருந்து கோதுமை ஏற்றுமதி முற்றிலுமாக முடங்கியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், அங்குள்ள உள்கட்டமைப்புகள் நாசமாகி உள்ளன. ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் தகர்க்கப்பட்டுள்ளன. இதனால் உக்ரைனால் ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில் உள்ளது.
இதுகுறித்து ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குத்ரேஸ் கூறுகையில், “உக்ரைனில் போர் பதற்றமிக்க பகுதிகளிலிருந்து மக்களை மீட்கும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது. எதிர்காலத்திலும் மக்கள் வெளியேற்றப் படுவார்கள். உக்ரைனில் நடந்த போரின் காரணமாக நாம் எதிர்கொள்ளும் வியத்தகு உணவுப் பாதுகாப்பு சார்ந்த அச்சுறுத்தல்களினால் உலகின் பல்வேறு பகுதிகளில் பட்டினி அபாயங்கள் பரவலாகி வருகின்றன. இதுகுறித்து நான் ஆழ்ந்த கவலை யடைந்துள்ளேன்” என்றார்.