உலகப் புகழ்பெற்ற தேம்ஸ் நதி பிரிட்டனில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக வற்றி வருவதாக இலண்டன் நகர்ப்புற நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளது.
புவி வெப்பமயமாதல், கால நிலை மாற்றம் போன்ற சிக்கலால் கடந்த சில ஆண்டுகளாகவே ஐரோப்பாவிலும் சராசரி வெப்பநிலையில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் தற்போது காட்டுத் தீ பரவல் பெருமளவில் நிகழ்ந்து வருகிறது.
குறிப்பாக, பிரிட்டன் நாட்டில் வரலாற்றிலேயே முதல்முறையாக சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அதிகபட்சமாக 38.7 டிகிரி வெப்பம் பிரிட்டனில் பதிவான நிலையில், அங்கு இம்முறை வெப்பமானது 40 டிகிரி தாண்டியுள்ளது.
இந்நிலையில், உலகப் புகழ்பெற்ற தேம்ஸ் நதி இந்த வறட்சி காரணமாக வற்றி வருவதாக இலண்டன் நகர்ப்புற நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளது. 356 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இலண்டன் தேம்ஸ் நதி இலண்டன் மற்றும் தெற்கு இங்கிலாந்தின் 1.5 கோடி மக்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.
இந்தாண்டு ஏற்பட்டுள்ள கடும் வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக நதியின் தொடக்கமான மூலப் பகுதி வறண்டு விட்டதாக நகர்ப்புற நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் 1935ஆம் ஆண்டுக்குப் பின் மிக மோசமான வறட்சியை இங்கிலாந்து சந்தித்துள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.