கடந்த வெள்ளிக்கிழமை (30) உக்ரைனின் நான்கு மாநிலங்கள் ரஸ்யாவுடன் இணையும் உத்தியோகபூர்வ நிகழ்வுக்காக மொஸ்கோவின் செஞ்சதுக்கம் தன்னை அலங்கரித்து விழாக்கோலம் பூண்டிருந்தது. சபரோசியா, கேர்சன், லுஹான்ஸ் மற்றும் டொனஸ்ற்க் போன்ற 7.5 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட 107,000 சதுர கி.மீ பரப்பளவுள்ள பிரதேசங்கள் ரஸ்யாவுடன் இணைகின்றன.
கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் இந்த மாநிலங்கள் ஒவ்வொன்றும் 80 விகிதத்திற்கும் மேலான வாக்குகளை இணைவதற்கு சார்பாக அழித்திருந்தன. இந்த வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்ரனியோ குருட்ரரஸின் கருத்து ஐ.நா என்பது மேற்குலகத்தின் ஒரு கருவி என்பதை மீண்டும் உலகுக்கு நிறுவியுள்ளதாக தெரிவித்துள்ளது மொஸ்கோ.கொசோவோவின் வாக்கெடுப்பிற்கும் உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற வாக்கெடுப்பிற்கும் வேறுபாடுகள் இல்லை இரண்டும் இனப்படுகொலையால் பாதிப்படைந்த மக்கள் தமது உயிரையும், இறமையையும் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சி.
கொசோவோவை ஆதரித்த ஐ.நா உக்ரைனில் இம்பெற்ற வாக்கெடுப்பை எதிர்ப்பது என்பது உக்ரைனில் புட்சா பகுதியில் சில நூறுபேர் இறந்தத்தை உடனடியாக இனப்படுகொலை என அறிவித்த அதேசயம், இலங்கையில் பல பத்தாயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டதை மனிதஉரிமை மீறல்கள் என வரையறுத்ததைபோலவே ஒரு இரட்டை வேடமாகும் என்பதுடன். ஐ.நாவின் மீதான நம்பிக்கையையும் ஐ.நாவின் நடவடிக்கைகள் சிதறடித்து வருகின்றன.
மின்ஸ்க் உடன்பாட்டை உக்ரைனும், ஐரோப்பிய ஒன்றியமும் மீறியதே தமது நடவடிக்கைக்கான காரணம் என்கிறது ரஸ்யா. இலங்கை இந்திய உடன்பாட்டை இலங்கை தூக்கியெறிந்து தமிழ் மக்கள் மீது ஒரு முழு எடுப்பிலான இனப்படுகொலையை இலங்கை மேற்கொண்டபோது இந்தியா இலங்கையின் பக்கம் நின்றது போல தன்னை நம்பிய மக்களை விட்டு ரஸ்யா ஓடவில்லை.
அந்த மக்களை பாதுகாப்பதன் மூலம் தனது நாட்டையும் மக்களையும் பாதுகாக்க அது பலம்பொருந்திய மேற்குலகத்தையும் ஐ.நாவையும் எதிர்த்து போராடுகின்றது.
இதனிடையே, கடந்த திங்கட்கிழமை (26) ரஸ்யாவில் இருந்து ஜேர்மனிக்கு பல்டிக் கடற்பகுதி ஊடாக செல்லும் Nord Stream1 and 2 என்னும் இரு எரிபொருள் வழங்கல் குழாய்கள் குண்டுத் தாக்குதல் மூலம் சேதமாக்கப்பட்டுள்ளன.இந்த குழாய்களை வேறு நாடுகளின் உதவிகள் இன்றி இலகுவாக தகர்க்க முடியாது. 4.1 சென்ரி மீற்றர் தடிப்பான உருக்கு குழாய்கள், 6 தொடக்கம் 11 சென்ரிமீற்றர் தடிப்பான கொங்கிறீட் பூசப்பட்டு பலப்படுத்தப்பட்ட பின்னரே ஆழ்கடலினுள் புதைக்கப்படுவதுண்டு. அதாவது கொங்கிறீட் பூசப்பட்ட பின்னர் ஒவ்வொரு குழாய்களினதும் எடை அண்ணளவாக 25 தொன்கள். எனவே சாதாரண இயற்கை அனர்த்தங்களில் இருந்து அது தாக்குப்பிடிப்பதுடன், விபத்துக்களுக்கும் சாத்தியமில்லை.
இரண்டு குழாய்களிலும் தலா இரு வெடிப்புக்கள் மூலம் 4 வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இரு வெடிப்புக்களுக்கு தலா 1000 கி.லோ ரி.என்.ரி எனப்படும் வெடிமருந்து பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என கூறுகின்றது அமெரிக்காவை தளமாகக் கொண்ட த வோல் ஸரீற் ஜேர்னல்.
ரஸ்யா உக்ரைன் மீது போர் ஆரம்பித்தால் இந்த எரிபொருள் குழாய்களை இயங்க அனுமதிக்க மாட்டோம் என சூழ் உரைத்திருந்தார் அமெரிக்க அரச தலைவர் ஜோ பைடன். குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற உடன் அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்து போலந்தின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தனது ருவிட்டர் தளத்தில் வெளியிட்ட கருத்தும், தாக்குதல் இடம்பெற்ற நாள் நோர்வேயில் இருந்து போலந்துக்கு எரிவாயு குழாய் அமைக்கப்பட்டு அதனை போலந்து பிரதமர் திறந்து வைத்ததும் பலத்த சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.ஒரு குழாயை கட்டுவதற்கு ஏறத்தாள 11 பில்லியன் டொலர்களும், 10 வருடங்களும் எடுக்கும் என்பதுடன் அதன் அழிவு என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத்தை குறிப்பாக ஜேர்மனியின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிப்பதுடன் ரஸ்யாவுக்கும் இழப்பாகும்.
இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என தெரிவித்துள்ள ரஸ்யாவின் நாடாளுமன்ற பேச்சாளர் பெஸ்கொவ், விசாரணைகளின் பின்னர் தான் மேலதிக கருத்துக்களை தெரிவிக்க முடியும் எனவும், எந்தவொரு நாட்டின் துணையின்றி இது நடந்திருக்க வாய்ப்புக்கள் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
குழாய்களின் அமுக்கத்தை பேணுவதற்கு நிரப்பப்படும் எரிவாயு தற்போது வெளியேறி வருகின்றது. குழாய்களை கடல்நீர் நிரப்புக்கின்றது. 300,000 தொன் எடை கொண்ட வாயுக்கள் வெளியேறுவதற்கு எதிர்வரும் திங்கட்கிழமை (3) வரை காலமெடுக்கும். அதன் பின்னரே விசாரணைகள் ஆரம்பிக்கப்படும். வெளியேறும் மீதேன் வாயு சூழல்வெப்பமாதலில் முக்கிய பங்குவகிக்கும் வாயு. அதாவது தாக்குதலை மேற்கொண்டவர்கள் சூழ்ல் பாதுகாப்பையும் புறந்தள்ளியுள்ளனர்.
இது அனைத்துலக கடற்பரப்பில் அனைத்துலக விதிகள் அனைத்தையும் மீறி நிகழ்த்தப்பட்ட ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்பதில் மாற்றக் கருத்தில்லை. இந்த கடற்பரப்பில் அண்மையில் நேட்டோ படையினர் பயிற்சியில் ஈடுபட்டதும், பிரித்தானியாவின் கடற்படை கப்பல் தரித்து நின்றதும் பதிவாகியுள்ளன.
சுவீடனுக்கு சொந்தமான பகுதியில் இரு வெடிப்பும், டென்மார்க்கிற்கு சொந்தமான பகுதியில் இரு வெடிப்புக்களும் நிகழ்ந்துள்ளதுடன், இந்த சம்பவம் கடலுக்கு அடியினால் செல்லும் ஏனைய எரிபொருள் குழாய்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. 1000 கிலோ வெடிமருந்தை கடலுக்குள் பயணிக்கும் ஆளற்ற சிறு நீர்மூழ்கிகளால் கொண்டு செல்ல முடியாது. எனவே தாக்குதல் என்பது பல மாதங்களாக அல்லது வருடங்களாக திட்டமிடப்பட்ட ஒன்று. நன்கு பயிற்சிபெற்ற கடற்படை அணி ஒன்றே மேற்கொண்டிருக்க வேண்டும்.எரிபொருள் வழங்கல் குழாய்களை தகர்த்தது மேற்குலகமே என குற்றம் சுமத்தியுள்ளார் ரஸ்யாவிள் வெளியக புலனாய்வுத்துறையின் தலைவர் சேர்கெ நரெஸ்கின். அதற்கான ஆதாரங்கள் ரஸ்யாவிடம் உள்ளதாகவும், 1980களில் நிக்கரகூவாவின் எரிபொருள் கட்டுமானத்தை அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ தகர்த்தததையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே நன்கு திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதல் எதிர்காலத்தில் மிகப்பெரும் அழிவுகளுக்கும், பொருளாதார சீரழிவிற்க்கும் வழிவகுக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இப்போதே நோர்வே தனது எரிபொருள் வழங்கல் குழாய்களை பாதுகாப்பது தொடர்பில் நடவடிக்கைளை எடுத்து வருகின்றது. ஏறத்தாள 9,000 கி.மீ நீளம் கொண்ட பல குழாய்களை தினமும் பாதுகாப்பது என்பது அவர்களின் சக்திக்கு மீறிய விடயம். அது மட்டுமல்லாது செலவும் மிக்கது.
ரஸ்யா மீதான எரிபொருள் தடையால் ஜேர்மனிக்கு இந்த வருடம் ஏற்பட்ட இழப்பு 60 பில்லியன் டொலர்கள். அடுத்த வருடம் அது 100 பில்லியன் என கணிப்பிடப்படுகின்றது. அது மட்டுமல்லாது உலகம் பொருளாதார வீழ்ச்சியை சந்திப்பது உறுதி என தெரிவித்துள்ளது உலக வர்த்தக அமைப்பு. ஆனால் ரஸ்யாவோ தான் இன்னும் முழுமையான பலத்தை பயன்படுத்தவில்லை என கூறுகின்றது.
இந்த நிலையில், சேக்ஸ்பியர் கூறிய வசனம் தான் நினைவுக்கு வருகின்றது. அதாவது நரகம் வெற்றிடமாக உள்ளது ஏனெனில் பேய்கள் எல்லாம் பூவுலகில் இருக்கின்றன (Hell is empty and all the devils are here.” ― William Shakespeare, The Tempest) என்பது தான் அந்த வசனம்.