தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தியும், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தும் வகையிலும், யாழ்ப்பாணத்தில் இன்று எழுக தமிழ் பேரணி முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
தமிழ் மக்களின் பல்வேறு அரசியல் காரணங்களை முன்வைத்து, யாழில் இடம்பெறும் “எழுக தமிழ்” பேரணிக்கு மக்கள் பூரண ஆரவை வழங்கியுள்ளனர்.
இதனால், யாழ் குடாநாட்டின் பிரதான நகரங்கள் அனைத்தும் செயலிழந்துள்ளன. இதனால் பொதுப் போக்குவரத்து இடம்பெறவில்லை.
குடா நாட்டின் அனைத்துப் பகுதிகளும் மக்கள் நடமாட்டமற்று வெறிச்சோடிக் காணப்படுவதுடன், பொது சந்தைகள் எதுவும் திறக்கப்படவில்லை.
அத்தோடு, பாடசாலைகள் வழக்கம் போல், கல்வி செயற்பாட்டுக்காக திறக்கப்படடுமென அறிவித்தல் வழங்கப்பட்டிருந்த போதும், மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்கவில்லை.
வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரனை இணைத் தலைவராக க்கொண்ட, தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இந்த எழுக தமிழ் பேரணி நடைபெறுகின்றது
அரசியல் தீர்வு மற்றும் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை விரும்பும் தமிழ் மக்களின் வலிமையைக் காண்பிக்கும் வகையில் இந்தப் பேரணி அமையும் என்று, தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவரான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.