தமது இலக்கின்படி இனப்பிரச்சினைக்கான தீர்வு இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின வருடத்தில் காணப்படவேண்டும். இல்லையேல் தீர்வைக் காணுவதற்கு 2048 ஆம் ஆண்டு வரை செல்லவேண்டியிருக்கும். 1984 ஆம் ஆண்டு முதல் இனப்பிரச்சினை தீர்வுக்கான விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்புகள் நிறைவடைந்த பின்னர், அனைத்து கட்சி கூட்டத்தை அழைப்பதாக உறுதியளித்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,
தமிழ் சமூகத்தின் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும். அதேபோன்று சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் நியாயமான அச்சங்கள் போக்கப்படவேண்டும். அத்துடன் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் நம்பிக்கையை கட்டியெழுப்பவேண்டும்.
இதேவேளை, வடக்கில் காணி விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப் பட்டுள்ளதாகவும் தாம் பாராளுமன்றத்தை கலைக்கப்போவதில்லை என்று குறிப்பிட்ட அவர், நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை முடிவடைந்த பின்னர் தேர்தலுக்கு செல்ல முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.