மன்னார் முசலி பிரதேசத்திற்கு உட்பட்ட அரிப்புத்துறையில் அமைந்துள்ள தமிழர்களின் வரலாற்றை பறை சாற்றி நிற்கும் அல்லிராணி கோட்டையானது கடலரிப்பினால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளது.
இது தொடர்பாக அவ்வூர் மக்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தமிழர்களின் மரபுரிமை வரலாற்று சின்னம் ஒன்று மெல்ல மெல்ல அழிவடைந்து கொண்டிருப்பதை எவரும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றார்கள்.
கடல் அரப்பிற்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் அல்லிராணி கோட்டைப் பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு கடலரிப்பு ஏற்பட்ட பகுதியில் 100 மீட்டர் அளவில் பாறைகள் போடப்பட்டு கோட்டை பகுதி மட்டும் கடலரிப்பினால் பாதிக்கப்படாமல் தடுப்பணை ஏற்படுத்தப்பட்டது.
ஆனால் தற்பொழுது கற்பாறைகள் போட்ட இடத்தை விட்டு அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் பாதிக்கப்படுகின்றது. இது குறித்து பல முறை உரியவர்களிடம் தெரிவித்தும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்றனர்.
மேலும் கடல் அரிப்பு ஏற்படும் பகுதிகளில் விரைவாக கற்பாறைகளை கொண்டு தடுப்பணை அமைக்காவிட்டால் நிச்சயமாக இன்னும் சில வருடங்களில் தமிழர்களின் மரபுரிமை வரலாற்று சின்னமான அல்லிராணி கோட்டை அழிந்துவிடும் என்று அவ்வூர் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை மன்னார் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள கொக்கு படையான் போன்ற மீனவ கிராமங்களும் கடல் அரிப்பிற்கு உள்ளாகி கொண்டிருப்பதாக மக்கள் பல முறை அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளார்கள். ஆனாலும் எந்த தீர்வும் இது வரையில் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.