இலங்கையில் இன்று தாதிய உத்தியோகத்தர்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதியினால் தங்களுக்கு உறுதியளிக்கப்பட்ட தாதிய பதவி நிலை மற்றும் ஏனைய நலன் தொடர்பான சுற்று நிரூபம் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட நிலையிலும் இதுவரையில் இது குறித்த சுற்று நிரூபங்களாக வெளியடப்படாத நிலையில், அவற்றினை வெளியிடுமாறு வலியுறுத்தியும் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள், வவுனியா வைத்தியசாலையில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட அரச தாதியர் சங்கத்தின் தலைவர் தலைமையில் இந்த போராட்டம் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியதாக நடைபெற்றது.
இரு மாவடடங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘தாதிய உத்தியோகத்தர்களிற்கு கோவிட் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கு, கொரோனா விடுதிகளுக்குரிய வசதிகளை வழங்கு, தாதியசேவை பதவிநிலை சேவை என சுற்று நிருபம் வெளியிடு’ ஆகிய வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
மேலும் தாதியர்களது பிரச்சனைகள் தொடர்பில் ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என்று தெரிவித்த அவர்கள், தமது கோரிக்கைகள் தீர்க்கப்படா விடில் போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.