வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயம் அறிவிப்பு வர்த்தமானியை நீக்குங்கள் – ஜனாதிபதியிடம் சீ.வீ.கே.சிவஞானம் கோரிக்கை

வலி.வடக்கில் 6 ஆயிரத்து 371 ஏக்கர் காணியை உயர் பாதுகாப்பு வலயமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பை நீக்கவேண்டும் என்று வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் நடந்த யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்தி குழு கூட்டத்திலேயே தான் மேற்கண்ட கோரிக்கையை விடுத்ததாக சீ.வீ.கே.சிவ ஞானம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

வலி. வடக்கில் 6 ஆயிரத்து 371 ஏக்கர் காணிகளை உயர் பாதுகாப்பு வலயமாக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டது. அதனை 2023ஆம் ஆண்டு நீக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கூறி இருந்தார். ஆனால் இதுவரையில் அந்த அறிவிப்பு மீள பெறப்படவில்லை. இந்நிலையில் குறித்த 6 ஆயிரத்து 371 ஏக்கர் காணிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. எனவே, முதல் கட்டமாக விடுவிக்கப்பட்ட காணிகளின் அறிவிப்பையாவது மீள பெறவேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.

இதேவேளை, தற்போது உயர்பாதுகாப்பு வலயமாக காணப்படும் பிரதேசத்தினுள் உள்ள 14 இந்து ஆலயங்களுக்கும் மக்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும். பலாலியில் விவசாய நடவடிக்கைக்காக 289 ஏக்கர் காணியை விடுவிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்ட போதிலும் அவை விடுவிக்கப்படவில்லை. அவற்றையும் விடுவிக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தேன்.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி உடனடியாக இந்த விடயங்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்- என்றும் சிவஞானம் கூறினார்.