ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்த அரசியலமைப்பு திருத்தம் அவசியமற்றது – சுமந்திரன்

“ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள்தான் என்பது அரசமைப்பிலும் தெளிவாக உள்ளது. அதை இப்போது உயர் நீதிமன்றமும் தெளிவுபடுத்தி விட்டது” என்று தெரிவித்த யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன், “இந்தநிலையில் ஜனாதிபதித் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பான அரசமைப்புப் பிரிவுகளில் மாற்றம் ஒன்று கொண்டுவரப்பட வேண்டிய தேவை எதுவும்இல்லை” என்றும் தெரிவித்துள்ளாா்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய சுமந்தின், “ஜனாதிபதியின் பதவிக்காலத்தை ஆறு வருடங்களுக்கு மேல் நீடிப்பதாயின் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப் பட வேண்டும் என்ற அரசமைப்பின் 83 (ஆ) பிரிவு இவ்விடயங்களில் சம்பந்தப்பட்டது அல்ல. அதை மாற்றி அமைக்க வேண்டிய தேவையும் இல்லை. அதை மாற்றி அமைப்பதாயின் அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவை என்ற கருத்து இருந்ததாலேயே 19 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டபோது அதை மாற்றாமல் அப்படியே விடுகின்ற தீர்மானம் எடுக்கப்பட்டது” என்றும் சுட்டிக்காட்டினாா்.

“அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் இணக்கத்தோடுதான் அப்படியே அதை விட்டுவிட முடிவு எடுக்கப்பட்டது. அதனால் சர்ச்சைகளோ குழப்பங்களோ ஏதுமில்லை. ஏற்கனவே ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள்தான் என்பது திட்டவட்டமாகத் தீர்மானிக்கப்பட்ட விடயம. இந்த 83 (ஆ)பிரிவு அரசமைப்பில் இருப்பதால் எந்தக் குழப்பமும் புதிதாக வந்துவிடாது” என்றும் சுமந்திரன் தெரிவித்தாா்.

“ஆனால், இந்தப் பிரிவுக்கு திருத்தம் கொண்டு வருகின்றோம் என்று குழம்பத்தை ஏற்படுத்த ஜனாதிபதியின் தரப்பு முயலுகின்றனர் என்று தோன்றுகின்றது. அந்தப் பிரிவைத் திருத்த சர்வஜன வாக்கெடுப்பு என்ற நிலைப்பாடு வருமானால், அதைக் காட்டி தம்முடைய பதவிக்காலம் 5 வருடங்கள்தானா என்பதை ஒட்டிய சர்ச்சையைக் கிளப்பலாம் என்று ஜனாதிபதி எண்ணுகின்றார் போலும்” என்றும் சுமந்திரன் சந்தேகம் தெரிவித்தாா்.

”நாடு வரும் ஒக்டோபர் 17 இற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது. அது சட்ட ரீதியான கட்டாயம். அதில் கை வைக்க அல்லது தேர்தலைத் தள்ளிப்போட முயற்சி எடுக்கப்பட்டால் அரசையும் ஜனாதிபதியையும் மக்கள் துரத்தி அடிப்பார்கள். அதனை முன் எச்சரிக்கையாகக் கூறி வைக்க விரும்புகின்றேன்” நாடாளுமன்ற உறுப்பினா் சுமந்திரன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தாா்.