கொரோனாவைப் பயன்படுத்தி புதிய அடக்கு முறை வழியை அரசு பயன் படுத்தத் தொடங்கி விட்டது. போராட்டங்களில் ஈடுபடுவோர் தனிமைப் படுத்தப்பட்டு தொலை தூர இடங்களுக்கு தனிமைப் படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக் கிழமை இடம்பெற்ற கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக் கழகம் தொடர்பான விவாதத்தில் உரையாற்று கையிலேயே இவ்வாறு குற்றம் சாட்டிய அவர் மேலும் கூறுகையில்,
ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக் கழகம் தொடர்பில் பாராளு மன்றத்தில் முன் மொழியப்பட்ட சட்டத்திற்கு எதிராக பத்தரமுல்லை பாராளு மன்ற சுற்று வட்ட பகுதியில் அனைத்து பல்கலைக் கழக மாணவர் சம்மேளனம் அமைதியான போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.
ஆனால் பொலிஸார் மிகவும் அராஜகமான முறையில் செயற்பட்டு போராட்டத்தில் பங்கேற்ற இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இரண்டு பௌத்த துறவிகள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட 31 பேர் வரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப் பட்ட இவர்களை பி.சி.ஆர்., அன்டிஜன் பரிசோதனைகள் எதுவுமின்றி நீதி மன்றத்தில் முன்னிலைப் படுத்தி அவர்களை தொலை தூரங்களில் உள்ள தனிமைப் படுத்தல் நிலையங்களுக்கு அனுப்புவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது அரசின் புதிய அடக்கு முறை வழி. கொரோனாவை பயன் படுத்தி மக்களின் உரிமை, ஜனநாயக போராட்டங்களை அடக்குவதற்கு அரசு தயாராகி விட்டது. காவல் துறையினரை முன்னிறுத்து அராஜகம் கட்டவிழ்த்து விடப் பட்டுள்ளது.
அரசியல் அமைப்பிலுள்ள மக்களின் உரிமைகள் இந்த அரசினால் மறுக்கப் பட்டுள்ளன. அரசுக்கு எதிராக மக்கள் வாய் திறக்கக் கூடாது என நேரடியாகவும் மறை முகமாகவும் அரசினால் இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் கூறப் படுகின்றது. ஆனால் மக்களின் ஜனநாயக உரிமைப் போராட்டங்களுக்கு எப்போதும் ஐக்கிய மக்கள் சக்தி உறுதுணையாக நிற்கும் என்றார்.