இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள் முறைகேடாக வழங்கப்படுவதாக தெரிவித்து அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்டத்தை சேர்ந்த 200 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இத்தோட்டத்தில் 200 குடும்பங்கள் இருந்தபோதும் ம் 110 குடும்பங்களுக்கு மாத்திரம் 10 கிலோ கொண்ட அரிசி பொதி வழங்குவதற்கு இன்று தோட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் அனைத்து மக்களுக்கும் இந்த நிவாரண பொருட்கள் வழங்க வேண்டுமென தெரிவித்து. தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
அத்தோடு நிவாரணம் கொடுத்தால் அனைவருக்கும் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இது தேவையில்லை. என மக்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து தோட்ட அதிகாரிகள் அரிசி வழங்கும் நிகழ்வை இரத்துச் செய்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அரிசி வைத்திருந்த களஞ்சியசாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில்,ஏனைய தோட்டங்களில் அனைத்து குடும்பங்களுக்கும் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண பொதிகள் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தோட்ட நிர்வாகம் சரியான முறையில் பெயர்பட்டியல் விபரங்கள் பிரதேச செயலகத்துக்கு வழங்காத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டதாக தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தின்போது தெரிவித்ததோடு தொடர்ந்து தோட்ட நிர்வாகம் தமக்கு பெரும் சிரமத்தை கொடுப்பதாகவும் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையீடு செய்து சகலருக்கும் நிவாரண பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கையும் விடுத்தனர்