வட மாகாணத்திலிருந்து இந்தியாவுக்கு மின்சாரம் – பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியாவில் ஜனாதிபதி

ranil வட மாகாணத்திலிருந்து இந்தியாவுக்கு மின்சாரம் - பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியாவில் ஜனாதிபதிவடக்கு மாகாணத்தில் மீளப் புதுப்பிக்கக்கூடிய சக்தி மூலமான மின்சார உற்பத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை அளவை கணக்கிடும்போது எஞ்சியதை இந்தியாவுக்கு விற்பனை செய்து பணம் பெறக்கூடிய நிலை உள்ளது. இதற்கான பேச்சுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கதெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்துக்கு 50 வீதத்துக்கும் அதிகமான பங்களிப்பைவழங்கும் மேல் மாகாணம் நாட்டின் பொருளாதாரத்தின் இயந்திரமாக செயல்படுகின்றது. வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களையும் அதனுடன் இணைத்துக்கொண்டு ஐந்து பிரதான இயந்திரங்களுடன் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த எதிர்பார்த்துள்ளேன் என்றும் அவர் கூறினார்.

வவுனியா மாவட்ட கலாசார மண்டபத்தில் நேற்று நடைபெற்ற வன்னி (வவுனியா, முல்லைத்தீவு, மன்னார்) மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களின் கல்வி, சுகாதாரம், மீள்குடியமர்த்தல், காணி, மின்சாரம், குடிதண்ணீர், சுற்றுலா, வனவள பாதுகாப்பு, மீன்பிடித் துறைகளில் காணப்படும் பிரச்னைகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதோடு, சில பிரச்னைகளுக்கான தீர்வுகளை ஜனாதிபதி அவ்விடத்திலேயே அறிவித்தார்.

“எமது நாட்டின் பொருளாதாரத்துக்கு ஓர் இயந்திரம் மாத்திரமே உள்ளது. அதற்கு 50 வீத பங்களிப்பு மேல் மாகாணத்திலிருந்தே பெறப்படுகிறது. மற்றைய மாகாணங்களிலிருந்து கிடைக்கும் பொருளாதார பங்களிப்பு மந்தமான நிலையிலேயே உள்ளது. நாடு என்ற வகையில் முன்னேறி செல்வதற்கு இயந்திரங்களின் எண்ணிக்கையையை அதிகரிக்க வேண்டும்.

அதற்காக மற்றைய மாகாணங்களின் பொருளாதாரத்தையும் பலப்படுத்த வேண்டும். அதற்காக சில மாகாணங்கள் அறியப்பட்டுள்ளன. வடக்கு, மேற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் இலங்கையின் தேசிய பொருளாதாரத்துக்குப் பெருமளவான பங்களிப்பை வழங்கும் மாகாணங்களாக மேம்படுத்தப்பட வேண்டும். தற்போது நிதி பலமும் இருப்பதால் இடைநிறுத்தப்பட்ட வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிக்க முடியும்.

இதேபோல் வெளிநாட்டு நிதியில் முன்னெடுக்கப்படும் திட்டங்களை தொடர்வதற்கான உதவிகளும் கிடைக்கப் பெறவுள்ளன. மேலும் வட மாகாணத்திடமிருந்து இந்நாட்டின் அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்பை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. வட மாகாணத்திலிருந்து காற்று மற்றும் வெப்ப நிலை காரணமாக மீள்புதுப்பிக்கத்தக்க
வலுசக்தி தயாரிப்புக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

வடக்கு மாகாணத்தில் தயாரிக்கூடிய மின்சாரத்தின் அளவை கணக்கிட்டு பார்க்கும்போது எஞ்சிய தொகையை இந்தியாவுக்கு விற்பனை செய்து பணம் பெறக்கூடிய நிலையும் உள்ளது. இதற்கான பேச்சுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வட மாகாணத்தின் விவசாயிகள் திறமையும் செயல்திறனும் கொண்டவர்கள். விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் வட மாகாணத்தின் விவசாய நிலங்களை முகாமைத்துவம் செய்வதன் வாயிலாக ஏற்றுமதி விவசாய தொழிற்துறையை பலப்படுத்தலாம்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.