அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து தனிமைப் படுத்துவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பொலிஸ்மா அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தனது கடும் ஆட்சேபனையை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ளது.
மேலும் சில சந்தர்ப்பங்களில் தங்கள் முன்னிலையில் நிறுத்தப்பட்ட ஆர்ப்பாட்டக் காரர்களை நீதவான்கள் பிணையில் விடுதலை செய்த பின்னரும் அவர்களை சில தனிமைப்படுத்தல் முகாமிற்கு காவல் துறை அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இதனை கவனத்தில் எடுத்துள்ளது. நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட தனி நபர்கள் நீதிமன்ற வளாகத்தில் வைத்து பலவந்தமாக பிடிக்கப்பட்டு அவர்களின் விருப்பத்திற்கு மாறாக தனிமைப்படுத்தல் நிலையங்களிற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளமை குறித்து ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் பொது சுகாதார பரிசோதகர்கள் போன்ற சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தலின் பேரில் எடுக்கப்பட்டவை என்பதற்கான சிறிய ஆதாரமும் இல்லை எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.