“நாட்டின் அனைத்து அவலங்களுக்கும் கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்பல்ல“-மகிந்த

“நாட்டை விட்டு போகலாமா என்று கோட்டாபய ராஜபக்ஷ என்னிடம் கேட்டிருந்தால், நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தியிருப்பேன்“ என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியிலேயே இவ்விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியை வழிநடத்த தான் தேவையா என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே தீர்மானிக்க வேண்டும் என்று கூறிய அவர், அதை கட்சி முடிவு செய்யும் என தெரிவித்ததாகவும் தான் ஒரு சட்டத்தரணி என்பதால் நீதிமன்றங்களில் பயிற்சி பெற முடியும் என்றும் தேவைப்பட்டால் செல்வதற்குத் தயாராக இருப்பதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் அனைத்து அவலங்களுக்கும் கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்பல்ல என்று குறிப்பிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, இதற்கு தானும் முந்தைய அரசாங்கங்கள் உட்பட அனைவரும் பதில் சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

துரதிருஷ்டவசமாக, தான் நம்பிய நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் கோட்டா செயல்பட்டார் என்பதால் அவரைக் குறை கூற முடியாது என்றும் கோட்டா, பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது சிறந்த நிர்வாகத் திறமையை வெளிப்படுத்தினார் எனவும் ஜனாதிபதியாக அவர் கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளானார் எனவும் மஹிந்த கூறியுள்ளார்.

முன்னர் ஒரு கடும்போக்குவாதியாக இருந்த அவர், மென்மையாக மாறினார் என்றும் குறிப்பிட்ட மகிந்த, அவர் அரசியல்வாதி அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.