அரசியலமைப்பைத் திருத்த அரசு அவசரம் – எதிா்க் கட்சிகள் சந்தேகம்

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் அரசியலமைப்பின் 83ஆம் உறுப்புரையில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு, அதனை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அவசரமாக அரசாங்கம் முன்னெடுக்கும் இந்த செயற்பாடுகள் குறித்து எதிா்க்கட்சிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதியும், நீதி அமைச்சரும் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 83 ஆம் உறுப்புரையின் (ஆ) பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட எனும் சொல்லுக்கு மாற்றாக ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட எனும் சொல்லை பதிலீடு செய்து அரசியலமைப்பின் 83 ஆம் உறுப்புரையின் (ஆ) பந்தியைத் திருத்தம் செய்வதற்காக கடந்த 9 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அதற்கிணங்க, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிப்பதற்கும் ஜனாதிபதியும், நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதனை நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவருவதன் மூலம் ஏதாவது வகையில் ஜனாதிபதித் தோ்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் முற்படுகின்றதா என்ற சந்தேகம் எதிா்க்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், இந்த விவகாரத்தில் பிரதான எதிா்க்கட்சிகள் உஷாராக இருக்கின்றன.