தமிழகம்: சென்னையில் 40 கி.மீட்டர் முதல் 45 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதோடு கன மழை பெய்து வருகின்றது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று மாலையில் இருந்து சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து தென்கிழக்கே சுமார் 100 கி.மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா வடதமிழகம் கடற்கரை பகுதியில் சென்னைக்கு அருகில் இன்று மாலை கடந்து செல்லும் என்றும் தரைக்காற்று 40 முதல் 45 கி.மீட்டர் வேகத்தில் வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வீட்டில் இருந்து மக்கள் வெளியே வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். அத்துடன் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 11 சுரங்கப்பாதைகளும் மூடப்பட்டுள்ளன. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் 1.25 இலட்சம் ஏக்கர் பயிர் வயல்கள் சேதமடைந்துள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள ஏரிகளில் நான்கில் ஒரு பங்கு நிரம்பியுள்ளன. மாநிலத்தில் 14 ஆயிரத்து 138 ஏரிகள் மற்றும் குளங்கள் உள்ளன. இதில் 3,691 ஏரிகள் நிரம்பி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.