புதைக்கப்பட்ட ஹிசாலினியின் சடலம் மீண்டும் வெளியே எடுக்கப்பட்டு, புதிய சட்ட வைத்திய விசாரணை அறிக்கை பெறப்பட வேண்டும் என கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை நேரடியாக சந்தித்து தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் பழனி திகாம்பரம், பாராளுமன்ற உறுப்பினர்களான வேலு குமார், உதய குமார் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் “எந்தவித அழுத்தங்களுக்கும் இடம் கொடுக்காமல் விசாரணையை மேற் கொள்ளுங்கள். புதிய பொலிஸ் குழுவுக்கு விசாரணைகளை கையளியுங்கள். இந்த விசாரணையில் இருந்து பொரளை காவல் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த பாலசூரியவை அகற்றுங்கள். அவரது விசாரணை நடவடிக்கையில் வெளிப்படை தன்மை இருப்பதாக தெரியவில்லை.” என்றும் வலியுறுத்தி யுள்ளனர்.
பிரதி பொலிஸ் மா அதிபரிடம், தமிழ் முற்போக்கு கூட்டணியினர் மேலும் கூறியதாவது,
“இது தமிழ், முஸ்லிம். சிங்கள இனப் பிரச்சினை அல்ல. ஆளும் கட்சி, எதிர்க் கட்சி அரசியல் பிரச்சினையும் அல்ல. சட்டம் ஒழுங்கு பிரச்சனை.”
“மரணமான ஹிசாலினியின் சந்தேகத்துக்கு இடமான மரணம் தொடர்பில் மேலதிக விபரங்களை இந்த புதிய காவல் துறை குழு கண்டு பிடித்து நாட்டுக்கு வெளிப் படுத்த வேண்டும்.”
“வீட்டுப் பணியில் ஈடுபட ஹிசாலினியின் வயது உகந்ததா? அவரது மரணம் ஏன் சம்பவித்தது? தற்கொலை என பொரளை காவல் நிலைய பொறுப்பதிகாரி பாலசூரிய எப்படி அதற்குள் முடிவுக்கு வந்தார்?”
“அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றால் அதற்கான காரணம் என்ன? அவர் தற்கொலை செய்து கொள்ள தூண்டப்பட்டாரா? பாலியல் நடை முறைக்கு அவர் உள்ளாக்கப் பட்டாரா?”
“அவர் பணியில் இருந்த இல்லத்தின் அனைத்து உறுப்பினர்களின் வாக்குமூல, விசாரணை விபரங்கள் என்ன? அவர்கள் அனைவரும் முழுமையாக விசாரிக்கப் பட்டனரா? ஹிசாலினிக்கும், அவர் வசித்த வீட்டு உறுப்பினர் களுக்கும் இடையில், இவரது தொழிலை தவிர வேறு உறவுகள் இருந்தனவா?”
“நெருப்புக்காக பயன் படுத்தப்பட்ட லைட்டர் எவருடையது? மண்ணெண்னை ஊற்றி தற்கொலை செய்து கொண்டார் என கூறும் பொரளை காவல் துறை பொறுப்பதிகாரி துமிந்த பாலசூரிய, தற்கொலை செய்து கொள்பவர் இயல்பாக தலையில் மண்ணெண்னையை ஊற்றிக் கொள்ளாமல், ஏன் தனது காலில் ஊற்றிக் கொண்டார் என்பதற்கு தரும் விளக்கம் என்ன?”
இக்கேள்வி களுக்கான விடைகளை காவல்துறை விசாரணை குழு கூடிய விரைவில் நாட்டுக்கு பெற்றுத் தர வேண்டும்.”
“குற்றம் நிகழ்ந்து இருந்தால், குற்றவாளிகள் எவராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். இது தொடர்பில் சட்ட மாஅதிபர் திணைக்கள ஆலோசனை பெறப்பட வேண்டும். இவை அனைத்தையும் நாம் கண்காணிப்போம்.” என்றனர்.