Home Blog Page 1877

அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 2,108 பேர் மரணம்

கோவிட்-19 வைரசின் தற்போதைய மையப்புள்ளியாக காணப்படும் அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,108 பேர் மரணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் மாநிலங்களில் நியூயோர்க் மாநிலமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 777 பேர் மரணமடைந்துள்ளனர்.

இருந்தபோதும் புதிய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறைந்து வருவதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது வரையில் அமெரிக்காவில் 18,761 பேர் மரணமடைந்துள்ளதுடன், 503,177 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் 18,849 பேர் மரணமடைந்துள்ளதுடன், 147,577 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் கொடுமையிலும், பொருளாதாரத் தடைகள்; இனப் படுகொலைகளுக்குச் சமம்: கியூபா

தங்கள் நாட்டின் மீது 60 ஆண்டுகால பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா இந்த கொரோனா கொடூரத்திலும் நீட்டித்து வருவது கொரோனாவை விடவும் கொடூரமானது என்று கியூபாஅமெரிக்காவை கடுமையாக விமர்சித்துள்ளது.

கம்யூனிஸ்ட் நாடான கியூபாவில் கொரோனாக்கு 15 பேர் மரணமடைந்துள்ளனர், 564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் பொருளாதாரத் தடையினால் தங்கள் நாட்டுக்குத் தேவையான மருத்துவ பொருட்களை வாங்குவதில் கடும் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

கியூபா நாட்டு சுகாதார அமைச்சக பன்னாட்டு உறவுகள் இயக்குநர் நெஸ்டர் மரிமோன் கூறும்போது, “அமெரிக்காவின் பொருளாதார-நிதித் தடைகள் மிகவும் நியாயமற்றது, ஒரு நாட்டுக்கு எதிராக இன்னொரு நாடு ஏற்படுத்திய நீண்ட காலத் தடை ஒன்று உண்டு என்றால் அது கியூபாமீதான தடையாகவே இருக்க முடியும்.

சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளடு, எங்கள் நாட்டு மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இந்தப் பொருளாதாரத் தடை கொடூரமானது மற்றும் இனப்படுகொலைக்குச் சமமானது.” என்று வேதனை வெளியிட்டுள்ளார்.

முதன் முதலில் கியூபா மீது அக்டோபர் 19, 1960-ல் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. காரணம் அமெரிக்காவின் கச்சா எண்ணை சுத்திகரிப்பு நிறுவனங்களை கியூபா தேசியமயமாக்கியது. அதிலிருந்து இருநாடுகளுக்கு இடையே கடும் பனிப்போர் இருந்து வருகிறது.

1992- முதல் கியூபாவின் மக்களுக்காக மட்டும் பயன்படும் வகையில் மருந்துகளை அமெரிக்கா அனுமதித்தது. ஆனால் கியூபாவுடன் உறவு வைத்து கொண்டால் அது தங்களை பாதிக்கும் என்று வங்கிகளும் நிறுவனங்களும் அஞ்சி கியூபாவுடன் வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டன.

ட்ரம்ப் பதவியேற்ற பிறகு தடைகள் இன்னும் இறுகி பிற நாடுகளும் கியூபாவுக்கு பொருட்களை அனுப்ப முடியாதவாறு செய்து விட்டார்.

சமீபமாக சீனாவின் அலிபாபா ஆன்லைன் ஜெயண்ட் நிறுவனம் கியூபாவுக்கு டெஸ்ட் கருவிகள், முகக் கவசங்கள், சுவாசக்கருவிகள் ஆகியவற்றை நன்கொடையாக அளித்தது, ஆனால் அதைக் கொண்டு வர வேண்டிய அமெரிக்க போக்குவரத்து நிறுவனம் அமெரிக்க தடைகளை மீறிவிடுவோம் என்று அஞ்சி அதை சப்ளை செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளது.

இதனால் கியூபா இந்த பொருட்களை வேறு சந்தைகளிலிருந்து வாங்க நேரிட்டுள்ளதால் விலை இருமடங்கு மும்மடங்கு அதிகமாகியுள்ளது. மேலும் பொருட்களும் தாமதமாக வருகிறது.

இதனால் கியூபாவுக்கு சுமார் 220மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது, என்கிறார் மரிமோன்.

1962 முதல் இந்தத் தடைகளினால் கியூபாவுக்கு சுமார் 3 பில்லியன் டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ஒக்ஸ்பாம் அறக்கட்டளை அமெரிக்காவை கடுமையாகத் தாக்கி இந்த தடைகளை உடனடியாக அகற்றுமாறு வலியுறுத்தியுள்ளது.

கோவிட்-19: மருத்துவப் பணிக்கு திரும்பும் ‘மிஸ் இங்கிலாந்து’

தற்போது மிஸ் இங்கிலாந்தாக இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர், பிரிட்டனில் கொரோனா தொற்று தீவிரமாக பரவும் இந்த நேரத்தில், மருத்துவ பணியை தொடர விரும்புவதாக கூறியுள்ளார்.

இந்தியாவில் பயணம் மேற்கொண்டிருந்த இருந்த சுவாச நிபுணரான பாஷா முகர்ஜி, தற்போது பிரிட்டன் திரும்பியுள்ளார். அந்நாட்டு சுகாதார சேவையில் இவர் பணியாற்ற இருக்கிறார்.

24 வயதான பாஷா முகர்ஜி, லின்கன்ஷைரில் உள்ள பாஸ்டன் பில்க்ரிம் மருத்துவமனையில் அடுத்த வாரம் தன் பணியைத் தொடங்க உள்ளார்.

தொண்டூழிய பிரசார நோக்கங்களுக்காக ஆசியா முழுவதும் பயணம் செய்துவந்த அவர், இந்தியாவுக்கும் வந்திருந்தார். அடுத்து பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், பிரிட்டனில் கொரோனா தொற்று தீவிரமாகியது தெரிய வந்தது. அங்கு மருத்துவ பணியாளர்களின் சுமையை பகிர்ந்த கொள்வதற்காக அவர் பிரட்டன் சென்றார்.

பிரிட்டனில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஓய்வு பெற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பணிக்கு வருமாறு அந்நாட்டு தேசிய சுகாதார சேவை கேட்டுக்கொண்டுள்ளது.

இளநிலை மருத்துவரான தனக்கு இந்த இக்கட்டான நிலையை சமாளிக்க கூடுதல் பயிற்சி மற்றும் கூடுதல் பொறுப்பும் வழங்கப்படும் என்பது பாஷா முகர்ஜிக்கு நன்கு தெரியும்.

கோவிட்-19 நோயாளிகள் இருக்கும் அறைகளுக்கு செல்வதில் உள்ள ஆபத்தும் அவர் அறிந்த ஒன்றே.

ஆனால் அதைப் பற்றி தான் கவலை கொள்ளவில்லை என்று பாஷா கூறுகிறார்.

நன்றி-பிபிசி

யேமனில் போர் நிறுத்தத்தை அறிவித்தது சவுதி கூட்டணி

COVID-19 நோய்த்தொற்றை அடுத்து யேமனில் இரண்டு வார போர் நிறுத்தத்தை சவுதி தலைமையிலான கூட்டணி அறிவித்துள்ளது.

யேமனில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்ப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக போர் நிறுத்தத்தை நீட்டிக்க முடியும் என சவுதி கூட்டணி அறிக்கை வௌியிட்டுள்ளது.

யேமனுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட தூதுவரின் அழைப்பிற்கிணங்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு வார கால போர் நிறுத்த அறிவிப்பை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் வரவேற்றுள்ளார்.

எவ்வாறாயினும், சவுதி தலைமையிலான கூட்டணியின் அறிவிப்பில் தமக்கு முழுமையான ஈடுபாடு இல்லை என ஹவுதி கிளர்ச்சிக்குழு தெரிவித்துள்ளது.

யேமனில் கடந்த ஐந்து வருடங்களாக உள்நாட்டு போர் இடம்பெற்று வருவதுடன், இதில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இலங்கையில் முகக்கவசம் அணிதல் கட்டாயமாகிறது

வீதிகளில் பயணிக்கும் போது முகக் கவசம் அணிவது இன்று முதல் கட்டாயமாக் கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் தொடர்ந்து செயற்படுத்தப்பட்டு வருவதுடன் சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களையும் பொது மக்கள் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுவருகின்றனர் இதன் அடிப்படையின் முகக் கவசம் அணிவது இன்று முதல் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டத்தின் போது, சிறிலங்கா காவல்துறை அனுமதியுடன் வீதிகளில் பயணிக்கும் அனைவரும் முகக் கவசம் அணிவது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முகக் கவசம் அணியாமல் வீதிகளில் பயணிப்பவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அனைத்து சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்நிலையங்களுக்கும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்..

ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் பெற்று கொண்டிருத்தாலும் அல்லது வீதிகளில் பயணிப்பதற்கு வேறு அனுமதி பெற்றிருந்தாலும் அவற்றினை கருத்திற்கொள்ளாமல் முகக் கவசம் அணிவதை வலியுறுத்தும் உத்தரவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பதில் சிறிலங்கா காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்..

வாகனங்களில் பயணிப்போர் உட்பட அனைவரும் முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றம்

உள்வாங்கப்பட்டதையடுத்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் சில பிரிவுகள் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ்; மண்டபம் மற்றும் காத்தான்குடி நகர சபையின் பழைய கட்டிடம் ஆகிய வற்றுக்கு தற்காலிகமாக உடனடியாக மாற்றப்பட்டு வருகின்றன.

நேற்று (10.04.2020) வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் சில பிரிவுகள் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ்; மண்டபம் மற்றும் காத்தான்குடி நகர சபையின் பழைய கட்டிடம் ஆகிய வற்றுக்கு உடனடியாக மாற்றப்பட்டு வருகின்றன.

காத்தான்குடி கடற்கரை வீதியில் கடற்கரையை அண்டியவாறு அமையப் பெற்றுள்ள காத்தான்குடி ஆதார வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக உள் வாங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில்; இயங்கி வந்த வெளிநோயாளர் பிரிவு, குழந்தை பிரசவ விடுதி, மற்றும் கிளினிக் ஆகிய சேவைகள் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ்; மண்டபம் மற்றும் காத்தான்குடி நகர சபையின் பழைய கட்டிடம் ஆகிய வற்றுக்கு தற்காலிகமாக மாற்றும் நடவடிக்கை இடம் பெற்று வருகின்றன. இதற்காக காத்தான்குடி நகர சபை இந்தக் கட்டிடங்களை வழங்கியுள்ளதாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தாhர்.

குருதி சுத்திகரிப்பு பிரிவு, மற்றும் உள நல மருத்துவப்பிரிவு என்பனவு நிருவாக நடவடிக்கையும் தொடர்ந்து காத்தான்குடி வைத்தியசாலைக் கட்டிடத்திலேயே இயங்குமென காத்தான்குடி ஆதார வைத்தியசாலை நிருவாகம் தெரிவிக்கின்றது.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர்;, காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் மற்றும் வைத்தியர்கள் ஊழியர்கள் நகர சபை ஊழியர்கள் இதனை மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

கடற்படையின் வெறியாட்டம்! மூவரை பற்களால் கடித்து குதறிய கொடூரம்

கடற்பகுதியில், சிறிலங்கா கடற்படையினரின் வெறித்தனமான தாக்குதலில் மூன்று மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை (07/04/2020) கிராஞ்சியில் உள்ள கடற்படை காவலரணில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விட்டு, கடற்தொழிலுக்காக சென்றிருந்த வேளை, இரவு 07:00 மணியளவில் அவ்விடத்திற்கு சென்று கடற்படையினர், அம்மீனவர்களை கைதுசெய்து, நீருக்குள் மூழ்கடித்து, ஆயுதங்களால் தாக்கியதுடன், பற்களினாலும் கடித்துக் குதறியுள்ளனர்.

இவ் வெறியாட்டத்தில் ஈடுபட்ட கடற்படையினரில் சிலர் சீருடை அணியாமல் நிர்வாணமாக நின்றதாகவும், அதிகளவு மதுபோதையில் இருந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக முறைப்பாடுகள் எதனையும் செய்யக்கூடாது எனவும், மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு செல்லக்கூடாது எனவும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இதனால் அச்சமுற்று வீடுகளில் இருந்த மீனவர்கள், தற்போது தாக்குதலின் காரணமாக ஏற்பட்ட வேதனை தாங்க முடியாமல் தகவலை வெளியிட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

ஆனையிறவு ஊடாக யாழிற்கு வந்த நபர்! தகவல் கோரும் பிரதேச செயலகம்.

ஆனையிறவு சோதனை மையம் ஊடாக நேற்று முன்தினம் வியாழக்கிழமை யாழ்.திரும்பிய நபர் ஒருவர் பற்றிய தகவல்களை கரவெட்டி பிரதேச செயலகம் கோரியுள்ளது.

படையினரது சோதனை சாவடியில் தனது பெயராக இராசா மாணிக்கம் (தேசிய அடையாள அட்டை இல-527452530V) எனவும் முகவரியாக இல81, கரவெட்டி வடக்கினையும் அவர் பதிவு செய்துள்ளார்.

எனினும் குறித்த முகவரியில் அவரை இனங்காண முடியாத நிலையில் கரவெட்டி பிரதேச செயலகம் அவரது தகவல்களை கோரியுள்ளது.

தகவல் தெரிந்தோர் கரவெட்டி பிரதேச செயலக தொலைபேசி இலக்கமான 0212263258 இற்கு தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

அரிசிக்கான சில்லறை விலை நிர்ணயம்.

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி கீரி சம்பா ஒரு கிலோ 125 ரூபாவாகவும் வெள்ளை அரிசி, சிகப்பரிசி ஆகியவை 55 ரூபாவாகவும் நாட்டரிசி 90 ரூபாவாகவும் சம்பா, வெள்ளை மற்றும் சிகப்பு அரிசி 90 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அபாயகரமான மழை பெய்யக் கூடிய சாத்தியம்.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடமேல் மாகாணத்திலும் அனுராதபுரம், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஏப்ரல் மாதம் 05ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. இன்று (11ஆம் திகதி) பலகத்துறை, எஹெட்டுவெவ, கதுருகஸ்தமன மற்றும் தாமரைவில்லு ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

மழை நிலைமை:
ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று :
மன்னாரிலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் காற்றானது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் நாட்டைச் சூழவுள்ளஏனைய கடற்பரப்புகளில் கிழக்கு முதல் வடகிழக்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

கடல் நிலை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது சாதாரண முதல் மிதமான கொந்தளிப்பாகக் காணப்படும்.